Webdunia|
Last Updated:
திங்கள், 16 ஏப்ரல் 2018 (14:31 IST)
எப்போதும் செவியில் ஒலித்துக்கொண்டிருக்கும் நீரோட்டத்தின் ஓசை, எங்கு திரும்பினாலும் வாழைத் தோட்டத்தால் மூடப்பட்டு பசுமையாய் காட்சிதரும் வயல்வெளிகள், ஊரைச் சுற்றி பெரும் சுவர் எழுப்பியதுபோல உயர்ந்த மலைகள், இடையறாது வீசிக்கொண்டிருக்கும் மாசற்றக் காற்று.
இப்படி நாம் வர்ணிக்கும் ஒரு அழிகிய பூமி, காஷ்மீரிலல்ல, நமது தமிழ்நாட்டிலேயே உள்ளது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதியின் முடிவில், நீலகிரி மாவட்டத்தின் எல்லையாகத் திகழும் தெங்கு மரஹாடா எனும் இடம்தான் இப்படியுள்ளது.
பரந்து விரிந்த சத்தியமங்கலம் வனத்தில் புகுந்து, கரடு முரடான பாதையில் (சுமோ, குவாலிஸ் போன்ற வலிமையான வாகனத்தில்) 28 கி.மீ. பயணம் செய்துதான் இந்த அழகிய பூமியைக் காண முடியும். ஆனால் பயணப்பாதை எல்லா ஆபத்துக்களும், இயற்கையின் வன அழகையும் கொண்ட சாகசமான அனுபவமாக இருக்கும்.
போகும் வழியில் யானைகளைக் காணலாம், கூட்டம் கூட்டமாக மான்களையும், காட்டெருமைகளையும் காணலாம். பகலாக இருந்தால் வாழ்க்கையில் பார்த்திராத - செம்போத்து போன்ற - பல அரிய பறவைகளைக் காணலாம். மயில்கள் மிகச் சாதாரணம். மாலை நேரத்தில் பயணம் மேற்கொண்டால், முயல், முள்ளம்பன்றி, யானைகள், நரிகள், கரடிகள், சிறுத்தைகள் என்று பல விலங்குகளைக் காணலாம்.
இப்படி இரண்டு, மூன்று மணி நேரம் பயணம் செய்து காட்டின் முடிவிற்கு வந்தால் மாயாறு (மோயாறு என்றும் கூறுவார்கள்) வரும். நீலகிரி மலைப் பகுதியில் அமைந்துள்ள குந்தா நீர் மின் நிலையங்களிலிருந்து திறந்துவிடப்படும் தண்ணீர் இந்த ஆற்றில் வருகிறது. எப்பொழுது நீர்வரத்து அதிகரிக்கும் என்று யாருக்கும் தெரியாது... அதனால் மாயாறு என்றழைக்கின்றனர்.