1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. சைவம்
Written By

சூப்பரான சுவையில் சின்ன வெங்காய சாம்பார் செய்ய...!

தனிச்சுவையுடன் கூடிய சின்ன வெங்காய சாம்பாரை எளிதில் செய்ய வேண்டும் என்றால் ஒரு சுலபமான வழி உண்டு. பருப்பை வேகவைக்காமலே  விருந்தினருக்கு உடனே செய்து அசத்தி விடலாம். அவற்றை எப்படி செய்வது என்பதை பார்ப்போம்.
 
தேவையான பொருள்கள்:
 
துவரம்பருப்பு - 25 கிராம் 
பாசிப்பருப்பு - 25 கிராம் 
கடலைப்பருப்பு - 25 கிராம் 
தக்காளி - 1
புளி  - எலுமிச்சை அளவு (கரைசல்)
பச்சை மிளகாய் - 1
சின்ன வெங்காயம் - 4
சாம்பார் பொடி - 1 மேஜைக்கரண்டி 
மஞ்சள்தூள் - 1/2 தேக்கரண்டி 
பெருங்காயத்தூள் - 1/4 தேக்கரண்டி 
கொத்தமல்லி - சிறிது 
உப்பு - தேவையான அளவு
 
தாளிக்க:
 
எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி 
கடுகு - 1/2 தேக்கரண்டி 
உளுந்தம்பருப்பு - 1/2 தேக்கரண்டி 
சின்ன வெங்காயம் - 4
கறிவேப்பிலை - சிறிது.
செய்முறை:
 
அடுப்பில் கடாயை வைத்து சூடானதும் துவரம்பருப்பு, பாசிப்பருப்பு, கடலைப்பருப்பு மூன்றையும் போட்டு நன்கு வறுத்து சிறிது  நேரம் ஆறவிடவும். ஆறிய  பிறகு மிக்ஸ்சியில் பொடி செய்து கொள்ளவும். தண்ணீர் சேர்த்து கரைத்து வைத்துக் கொள்ளவும். தக்காளியை பொடிதாகவும், வெங்காயம், பச்சை மிளகாய்  இரண்டையும் நீளவாக்கிலும் வெட்டி வைக்கவும்.
 
கடாய் வைத்து 2 மேஜைக்கரண்டி எண்ணெய் காய்ந்ததும் வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்கவும். பிறகு தக்காளி  சேர்த்து நன்கு வதக்கவும். தக்காளி  நன்கு வதங்கியதும் சாம்பார் பொடி, மஞ்சள் தூள், பெருங்காயத்தூள் சேர்த்து கிளறவும். பிறகு புளி கரைசல், உப்பு, தண்ணீர் சேர்த்து மசாலா வாடை போகும்  வரை கொதிக்க விடவும். பிறகு பொடியை சேர்த்து கொத்தமல்லி தூவி அடுப்பை அணைக்கவும்.
  
தாளிக்க அடுப்பில் கடாய் வைத்து 2 மேஜைக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு போடவும். கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலை,  வெங்காயம் சேர்த்து வதக்கி குழம்பில் ஊற்றி நன்றாக கலந்து விடவும். சுவையான சின்ன வெங்காய சாம்பார் தயார்.
 
குறிப்புகள்:
 
மூன்று வகையான பருப்புகளை சம அளவு எடுத்து வறுத்து மிக்ஸ்சியில் பொடி செய்து வைத்துக் கொண்டால் தேவைப்படும் போது உபயோகபடுத்தலாம்.