வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. இலங்கை செய்தி
  3. இலங்கை முக்கிய செய்தி
Written By
Last Modified: திங்கள், 1 ஜூன் 2015 (17:48 IST)

பெண்களுக்கெதிரான வன்முறைகளை கண்டித்து நாடுதழுவிய ஆர்ப்பாட்டம்

இலங்கையின் வடகிழக்கு உள்ளிட்ட அனைத்து பிரதேசங்களிலும் இடம்பெற்று வரும் பெண்கள் மற்றும் சிறார்களுக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் அனைத்து விதமான வன்முறைகளை கண்டித்தும், இது தொடர்பான வழக்குகளை விரைந்து நடத்தி குற்றவாளிகளை தண்டிக்கக்கோரியும் இலங்கை முழுவதும் நாடுதழுவிய அளவில் ஆர்ப்பாட்டங்கள் நடந்துள்ளன.


இன்று திங்கட்கிழமை மொத்தமாக நாட்டின் 11 இடங்களில் கவனயீர்ப்புப் போராட்டம் நடத்தப்பட்டிருக்கிறது. வவுனியா மன்னார் வீதியில் வவுனியா பிரதேச செயலகத்திற்கு எதிரில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புங்குடுதீவு மாணவி வித்யாவின் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள 9 சந்தேக நபர்களும் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் நேற்றைய தினம் ஆஜர் செய்யப்பட்ட அதேவேளை இந்த கவனயீர்ப்புப் போராட்டம் நடத்தப்பட்டிருந்தது.
 
இலங்கையின் கிழக்கு மாகாணத்திலும் பெண்கள், மனித உரிமை ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்ட கவன ஈர்ப்பு பொராட்டங்கள் நடைபெற்றுள்ளன. பெண்கள் அமைப்புகள், சிறுவர் உரிமைகளுக்கான அமைப்புகள் மற்றும் மனித உரிமைகளுக்கான அமைப்புகள் என பல்வேறு அமைப்புகள் கூட்டாக இணைந்து இந்த கவன ஈர்ப்பு போராட்டங்களை முன்னெடுத்தன.
 
மட்டக்களப்பு நகரில் காந்தி சதுக்கத்தில் நடைபெற்ற இந்த கவன ஈர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டவர்களின் வாய்களில் கறுப்புத் துணிகளை கட்டியவாறு பாலியல் வன்முறைகளுக்கான நீதிகோரும் வாசக அட்டைகளை ஏந்தியவாறு காணப்பட்டனர்.
 
பெண்கள் சிறுவர்களுக்கு எதிரான பாலியல்வன்முறைகளுக்கு துரிதமாக நீதி வழங்கப்பட வேண்டும்; இதில் தாமதங்கள் தொடரக்கூடாது; பெண்கள் மற்றும் சிறார்களுக்கு எதிரான வன்முறைகளை எங்களது நாட்டிலும் சமூகத்திலும் எப்போதும் ஏற்றுக்கொள்ளமாட்டோம் என்கிற உறுதி மொழிகளும் இன்றைய கவன ஈர்ப்பு போராட்டத்தின்போது முனனெடுக்கப்பட்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
 
பெண்கள் மற்றும் சிறார்களுக்கு எதிரான எல்லாவிதமான வன்முறைகளையும் தடுப்பதற்கான உறுதிமொழிக்கான கையெழுத்துக்களும் அங்கு சேகரிக்கப்பட்டன.