பிரெஞ்ச் சூப்பர் சீரிஸ்: 2வது சுற்றில் சாய்னா நேவால்
புதுடெல்லி, வியாழன், 29 அக்டோபர் 2009( 13:28 IST )
பிரான்ஸில் நடந்து வரும் பிரெஞ்ச் சூப்பர் சீரிஸ் பேட்மின்டன் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றுக்கு இந்திய வீராங்கனை சாய்னா நேவால் முன்னேறியுள்ளார்.
பாரீஸில் நடந்து வரும் இத்தொடரில் நேற்று நடந்த முதல் சுற்றுப்போட்டியில் ஜெர்மனி வீராங்கனை ஜூலியன் சச்சென்க் உடன் மோதிய சாய்னா, 21-18, 19-21, 21-13 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றார். இப்போட்டி 53 நிமிடங்கள் வரை நீடித்தது.
ஜுவாலா குட்டா வெற்றி: இதேபோல் மற்றொரு இந்திய வீராங்கனை ஜுவாலா குட்டா, இத்தொடரின் மகளிர் இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார்.
மகளிர் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் ஜுவாலா குட்டா-அஷ்வினி இணை, டென்மார்க்கின் டம்க்ஜாயெர் குருஸ்-மி ஸ்ஜோட் இணையை எதிர்த்து விளையாடியது. இதில் 21-17, 21-18 என்ற புள்ளிக்கணக்கில் குட்டா இணை வென்றது.
இதன் பின்னர் நடந்த கலப்பு இரட்டையர் முதல் சுற்றுப் போட்டியில், குட்டா-டிஜு இணை பிரான்ஸின் பாப்டிஸ்டி கரிமி-லாரா சோய்நெட் இணையை 21-19, 21-15 என்ற புள்ளிக்கணக்கில் வென்றது.