தேசிய ஜுனியர் வில்வித்தை போட்டி: தமிழக அணிக்கு 15 பேர் தேர்வு
சென்னை, திங்கள், 26 அக்டோபர் 2009( 14:20 IST )
தேசிய ஜுனியர் வில்வித்தை சாம்பியன் போட்டி சத்தீஷ்கர் மாநிலத்தில் உள்ள ராய்ப்பூரில் அடுத்த மாதம் (நவம்பர்) 1-ந் தேதி முதல் 5-ந் தேதி வரை நடக்கிறது. இதில் பங்கேற்பதற்காக 15 பேர் கொண்ட தமிழக அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது.
சென்னை பெசன்ட் நகரில் உள்ள தமிழ்நாடு வில்வித்தை சங்க தலைமையகத்தில் நேற்று காலை 8 மணிக்கு வீரர், வீராங்கனைகள் தேர்வு துவங்கியது.
தமிழ்நாடு வில்வித்தை சங்க பொதுச் செயலாளரும், பிரபல கராத்தே வீரருமான ஷீஹான் ஹூசைனி முன்னிலையில் தேர்வுப் போட்டிகள் நடைபெற்றன. இதில் 12 மாவட்டங்களை சேர்ந்த 57 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
தேர்வு போட்டிகளின் முடிவில் தேசிய ஜுனியர் போட்டிக்கான தமிழக வில்வித்தை அணி அறிவிக்கப்பட்டது. இதில் பிரசன்ன குமார், பிரதீப், அப்துல் முதாலிப், வெங்கடேஷ், சபரிஷ், சரவணகுமார், ஞானவல்லி, செல்வராணி, தவமணி, வெற்றிவேல், சரவணகுமார், பிரதீப், விஷ்வா, முகமது இம்ரான், கதிர்வேல் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.