லண்டனில் வரும் 2012இல் நடைபெறும் ஒலிம்பிக் தொடர் மல்யுத்தப் போட்டியில் தங்கப்பதக்கம் வெல்வேன் என பீஜிங் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற சுஷில்குமார் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பீஜிங்கில் வெண்கலம் வென்ற சுஷில்குமாரை கவுரவிக்கும் விதமாக வேலம்மாள் மெட்ரிக் பள்ளியில், தமிழக தடகள கூட்டமைப்பின் சார்பில் சென்னையில் இன்று பாராட்டு விழா நடத்தப்பட்டது.
இதில் பங்கேற்றுப் பேசிய சுஷில்குமார், தனது தற்போதைய இலக்கு 2010 காமன்வெல்த் போட்டிகளில் இந்தியாவுக்கு தங்கம் வென்று தருவதே என கூறியதும் அதனை மாணவர்கள் கைதட்டி வரவேற்றனர்.
தொடர்ந்து பேசிய சுஷில்குமார், இதையடுத்து லண்டனில் 2012இல் நடக்கும் ஒலிம்பிக் தொடரில் தங்கப்பதக்கம் வெல்வதே எனது முக்கிய இலக்கு என்றார்.
இங்கு கூடியுள்ள மாணவர்கள் கடினமாக உழைத்து ஒலிம்பிக்கில் பதக்கம் பெற வேண்டும் என்ற லட்சியத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என வலியுறுத்திய சுஷில்குமார், கிரிக்கெட் விளையாட்டுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்தை, மல்யுத்தம் போன்ற ஒலிம்பிக் போட்டிகளுக்கும் மாணவர்கள் அளிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
முன்னதாக, வேலம்மாள் குழுமத்தின் நிறுவனர் மற்றும் தலைவரான எம்.வி.முத்துராம லிங்கம், ரூ.5 லட்சத்திற்கான காசோலையை சுஷில்குமாருக்கு பரிசாக வழங்கிப் பாராட்டினார்.
|