இண்டியானாபோலிஸ் டென்னிஸ் போட்டித் தொடர் இரட்டையர் பிரிவு முதல் சுற்றிலேயே தோல்வி தழுவி இந்தியாவின் லியாண்டர் பயஸ்-மகேஷ் பூபதி இணை வெளியேறியது.
கனடா நாட்டு இரட்டையர் இணையான டேனியல் நெஸ்டர்-ஃபிரெடெரிக் நைமேயர் இணை 6- 4, 3- 6, 12- 10 (டைபிரேக்கர்) என்ற செட்களில் இந்திய இணையை வீழ்த்தி அதிர்ச்சி அளித்தது.
நீண்ட நாள் கருத்து வேறுபாடுகளுக்கு பிறகு பூபதி-பயஸ் இணை ஒலிம்பிக் போட்டிகளுக்காக இணைந்தனர். ஆர்டினா ஓபன் டென்னிஸ் தொடரில் இந்த இணை இறுதிப் போட்டியில் தோல்வி தழுவியது.
இண்டியானாபோலிஸ் டென்னிஸ் தொடர் ஒலிம்பிக் போட்டிகளுக்கு செல்வதற்கு முன் இருவரும் சேர்ந்து விளையாடும் கடைசி சர்வதேச தொடர் இது. இதன் பிறகு இருவரும் சிறிது காலம் பயிற்சியில் ஈடுபடவுள்ளனர் பிறகு பீஜிங் செல்கின்றனர்.
2004 ஏதென்ஸ் ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கத்திற்கான இரட்டையர் பிரிவு போட்டியில் பயஸ்-பூபதி இணை மரியோ ஆன்சிச்-இவான் லூபிசிச் இணையிடம் தோல்வி தழுவி வெண்கலத்தை கோட்டை விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
|