ஆசியக் கோப்பை ஜூனியர் ஹாக்கி போட்டி அரையிறுதியில் பாகிஸ்தானை இந்தியா 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. ஆனால் ஆட்டத்தின் நடுவே இந்தியா பாகிஸ்தான் வீரர்கள் அடிதடியில் ஈடுபட்டனர்.
ஆட்டத்தின் 15-வது நிமிடத்தில் இந்திய வீரர் குர்விந்தர் சிங் சான்டி ரிவர்ஸ் ஃபிளிக் செய்து அபாரமான முதல் கோலை அடித்து முன்னிலை அளித்தார்.
இடைவேளைக்குப் பிறகு இந்தியாவின் திவாகர் ராம் இரண்டு கோல்களை அடித்து பாகிஸ்தானிடமிருந்து வெற்றியை பறித்தார்.
ஆனால் ஆட்டத்தின் 31-வது நிமிடத்தில் பாகிஸ்தான் வீரர் முகமது இர்ஃபானுக்கும் இந்திய வீரர் சான்டிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இந்த வாய்த்தகராறு அடிதடியாக மாறி இரு அணி வீரர்களும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். முகமது இர்ஃபானுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. அவர் ரத்த காயத்துடன் வெளியேறினார்.
நடுவர்கள் இந்திய, பாகிஸ்தான் அணித் தலைவர்களை அழைத்துப் பேசி எச்சரிக்கை செய்து, ஆட்டம் மீண்டும் துவங்கியது. இதன் பிறகே பாகிஸ்தான் 42-வது நிமிடத்தில் முதல் கோலை அடித்தது. ஆனால் இதுவே கடைசி கோலாகவும் அமைந்தது.
மற்றொரு அரையிறுதியில் ஜப்பானை தென்கொரிய அணி 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இறுதியில் இந்தியாவை சந்திக்கிறது.
|