சர்வதேச பீச் வாலிபால் போட்டி சென்னையில் இன்று தொடங்குகிறது. இதில் 21 நாட்டு வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.
இந்தியாவில் முதல் முறையாக சர்வதேச பீச் வாலிபால் போட்டி சென்னையில் நடத்தப்படுகிறது. இந்திய கைப்பந்து கூட்டமைப்பின் அனுமதியுடன் மெரீனா பீச் வாலிபால் கிளப் நடத்தும் இந்த போட்டி இன்று தொடங்கி 20ஆம் தேதி வரை சென்னை பெசன்ட் நகரில் உள்ள எலியட்ஸ் கடற்கரையில் நடைபெறுகிறது. பி.எஸ்.என்.எல். நிறுவனம் இந்த போட்டியின் விளம்பரதாரர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா, தாய்லாந்து, பிரேசில், கஜகஸ்தான், அமெரிக்கா, சிறிலங்கா, இத்தாலி, ஆஸ்திரியா, இங்கிலாந்து உள்பட 21 நாடுகளில் இருந்து வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். இதில் ஆண்கள் பிரிவில் இந்தியா சார்பில் பங்கேற்கும் 6 அணிகள் உள்பட மொத்தம் 31 அணிகள் களம் இறங்குகின்றன. பெண்கள் பிரிவில் 4 இந்திய அணிகள் உள்பட 16 அணிகள் கலந்து கொள்கின்றன.
போட்டிகள் காலை 9 மணிக்கு போட்டி தொடங்குகின்றன. இரவு 11 மணி வரை மின்னொளியில் ஆட்டங்கள் நடைபெறுகிறது. 3 ஆயிரம் பேர் அமரும் வகையில் கேலரிகள் அமைக்கப்பட்டு உள்ளன. ஒவ்வொரு நாளும் நுழைவு கட்டணம் ரூ.100 ஆகும். மைதானத்தில் நுழைவுச் சீட்டுகள் வழங்கப்படுகின்றன.
போட்டியின் மொத்த பரிசுத்தொகை ரூ.35 லட்சம் ஆகும். ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் பட்டம் வெல்லும் அணிக்கு தலா ரூ.2.68 லட்சம் பரிசுத்தொகையாக வழங்கப்படும். தூர்தர்ஷன் விளையாட்டு சேனலில் இந்த போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
|