யூரோ 2008 பிரிவு சி போட்டியில் உலக சாம்பியன் இத்தாலி அணி பிரான்சை 2- 0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றது.
ஆட்டத்தின் 25-வது நிமிடத்தில் இத்தாலி வீரர் ஆந்த்ரியா பிர்லோ பெனால்டியில் முதல் கோலை அடித்து முன்னிலை கொடுத்தார்.
இத்தாலியின் நட்சத்திர வீரர் லூகா டோனி பெனால்டி பகுதிக்குள் வந்து கோல் அடிக்கும் தருணத்தில் பிரான்ஸ் வீரர் எரிக் அபிதால் அவரை கீழே தள்ளினார். இதனால் எரிக் அபிதாலுக்கு சிகப்பு அட்டை காண்பிக்கப்பட்டது. அவர் வெளியேறினார். அதன் பிறகு 10 வீரர்களுடன் பிரான்ஸ் ஆட வேண்டிய நிலை ஏற்பட்டது.
பிறகு 62-வது நிமிடத்தில் இத்தாலி வீரர் டேனியெல் டி ரோஸ்ஸி இரண்டாவது கோலை அடித்தார். இதுவே வெற்றிக்கான கோலாகவும் அமைந்தது.
அதாவது ஃப்ரீ-கிக் ஒன்றை டி ரொஸ்ஸி அடிக்க பந்து நேராக பிரான்ஸ் வீரர் தியரி ஹென்றி காலில் பட்டு கோலுக்குள் சென்றது. பிரான்ஸ் கோல் கீப்பர் கூபே ஒன்றும் செய்ய முடியவில்லை.
பிரான்ஸ் அணிக்கு இந்த யூரோ 2008 மறக்கப்படவேண்டிய ஒரு தொடரானது. ருமேனிய அணியுடன் கோல் எதுவும் போட முடியாமல் டிரா செய்தது, பிறகு ஹாலந்து 4- 1 என்ற கோல் கணக்கில் அடித்து நொறுக்கியது.
இத்தாலி அணியுடன் துவக்க நிமிடங்களில் தன்னம்பிக்கையுடன் துவங்கியது பிரான்ஸ். முதலிலேயே இரண்டு கார்னர் வாய்ப்புகள் கிடைத்தது. ஆனால் அதனை கோலாக மாற்ற முடியவில்லை. மாறாக இத்தாலியின் டோனி கோல் அடிக்க வேண்டிய எளிதான வாய்ப்பை வெளியில் அடித்து தவற விட்டார்.
பிரான்ஸ் அணி திறமையுடன் விளையாடினாலும், இடைவேளைக்கு முன்பு வாய்ப்புகளை கோலாக மாற்ற முடியாமல் திணறியது. இடைவேளைக்கு பிறகு தியரி ஹென்றி அடித்த ஷாட்டை இத்தாலி கோல் கீப்பர் பாய்ந்து தடுத்தார்.
பிறகு 73-வது நிடத்தில் பிரான்ஸ் வீரர் பென்ஸீமா அடித்த ஷாட் ஒன்று சுழன்றபடியே கோலை நோக்கி வந்தது. அதனை மீண்டும் பஃபான் அபாரமாக ஒரு கையால் தடுத்தார்.
இந்த தொடரில் இத்தாலி பெறும் முதல் வெற்றி இது என்பது குறிப்பிடத்தக்கது.
|