ரோலாண்ட் கேரோஸ்: பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் காலிறுதிச் சுற்றுக்கு செர்பிய வீரர் ஜோகோவிச், ஸ்பெயின் வீரர் ரஃபேல் நாடல் ஆகியோர் முன்னேறியுள்ளனர்.
3-வது தரவரிசையில் உள்ள ஜோகோவிச் 18-வது தரவரிசையில் உள்ள பிரான்ஸ் வீரர் பால் ஹென்றி மேத்யூவை 6-4, 6-3, 6-4 என்ற நேர் செட்களில் எளிதாக வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.
2-வது தரவரிசையில் உள்ள ரஃபேல் நாடல் மற்றொரு ஸ்பெயின் வீரரும் 22-வது தரவரிசையிலும் உள்ள ஃபெர்னான்டோ வெர்டாஸ்கோவை 6-1, 6-2, 6-0 என்ற செட்களில் வீழ்த்தினார்.
லாட்வியாவைச் சேர்ந்த, தரவரிசையில் இல்லாத எர்னெஸ்ட் குல்பிஸ் 6-4, 7-6, 6-3 என்ற செட்களில் பிரான்ஸ் வீரர் லோத்ராவை வீழ்த்தி முதன் முதலாக கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் காலிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.
ஸ்பெயினைச் சேர்ந்த 19-வது தரவரிசையில் உள்ள நிகோலஸ் அல்மார்கோ பிரான்ஸ் வீரர் ஜெரெமி சார்டி என்பவரை 7-6, 7-6, 7-5 என்ற செட்களில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.
ஆஸ்ட்ரேலிய வீரர் லெய்டன் ஹூவிட் ஸ்பெயின் வீரர் ஃபெரரிடம் தோல்வி தழுவி வெளியேறினார். அதேபோல் 3-வது சுற்றில் ரஷ்ய வீரர் டேவிடென்கோ குரோஷிய வீரர் இவான் லூபிசிச்சிடம் அதிர்ச்சித் தோல்வி தழுவினார்.
மற்றொரு ஸ்பெயின் வீரர் டாமி ராப்ரீடோவும் ஸ்டெபானெக்கிடம் தோல்வி தழுவி வெளியேறினார்.
|