ஜெய்பூர்: மும்பை இந்தியன் அணிக்கு எதிராக நடைபெற்ற ஐ.பி.எல். இருபதுக்கு 20 போட்டியில் கடைசி பந்தில் வெற்றிபெற்றது தன் 20 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்வில் மறக்க முடியாத வெற்றி என்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணித் தலைவர் ஷேன் வார்ன் தெரிவித்துள்ளார்.
40 ரன்கள் எடுத்த நீரஜ் படேல், 23 ரன்கள் எடுத்த ஆர்.ஜடேஜா ஆகிய இருவரது கிரிக்கெட் திறமைகளை வானளாவ புகழ்ந்துள்ளார் ஷேன் வார்ன்.
கடைசி ஓவரில் தேவையான 15 ரன்களை கடைசி பந்தில் அடித்து பெற்ற பரபரப்பான வெற்றி தனது 20 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்வில் சிறப்பான வெற்றி என்று ஷேன் வார்ன் நேற்று செய்தியாளர்களிடையே கூறியுள்ளார்.
ஆர்.ஜடேஜா கவர் திசை எல்லைக்கோட்டைத் தாண்டி அடித்த சிக்சர் நம்ப முடியாத ஒரு அடி, அந்த சிக்சர் ஜடேஜாவிடம் உள்ள திறமைகளை எடுத்துரைக்கிறது. அதே போல் நீரஜ் படேல் எவ்வளவு உபயோகமான வீரர் என்பதையும் காட்டியுள்ளது என்றார் ஷேன் வார்ன்.
அதே போல் சொஹைல் தன்வீரின் பந்து வீச்சையும் ஒருவரும் மறக்க முடியாது என்று கூறிய ஷேன் வார்ன் தங்கள் அணியில் இளைஞர்களை உற்சாகப்படுத்துகிறோம் என்றார்.
மும்பை இந்தியன் அணி பயிற்சியாளர் லால் சந்த் ராஜ்புட் தன் அணிக்கு அதிர்ஷ்டம் இல்லை என்று கூறியதை ஷேன் வார்ன் கடுமையாக மறுத்துள்ளார். "தில்ஹாரோ ஃபெர்னான்டோ போன்ற சர்வதேச தர பந்து வீச்சாளர் நெருக்கடி தருணத்தில் வைட் பந்து வீசுகிறார் என்றால் அது அதிர்ஷ்டம் தொடர்பானதல்ல. மேலும் அவர் தன் கடைசி ஓவரை வீச நீண்ட நேரம் எடுத்துக் கொண்டார், இதனால் அவரது பந்து வீச்சு பாதிக்கப்பட்டது" என்றார்.
|