இந்திய ஹாக்கி கூட்டமைப்பின் செயலர் ஜோதிகுமரன் இந்திய அணிக்கு விரர்களைத் தேர்வு செய்ய லஞ்சம் பெற்றதை ஆஜ் தக் தொலைக்காட்சி ரகசியமாக படம்பிடித்து வெளியிட்டதன் மூலம், இந்திய ஹாக்கிக்கு புத்துயிரூட்ட வழி பிறந்துள்ளது.
தான் லஞ்சம் பெற்றதை மறைக்க ஜோதிகுமரன் வெளியிட்ட அறிக்கையை ஆழ்ந்து படித்த எவரும், அவர் உண்மையை மூடி மறைக்க அவிழ்த்துவிட்ட கதையை நம்பமாட்டார்கள். ஸ்பான்சர் செய்ய முன்வரும் நிறுவனம், இவரை இப்படித் தனியாக சந்தித்து முன்பணம் கொடுக்குமா? உண்மையை மூடுவதற்கு பெரிய பொய்யை கட்டவிழ்த்துவிடுகிறார்.
இந்திய ஹாக்கியின் உள் நடைமுறை உண்மைகளை அறிந்துவர்களுக்கு இதெல்லாம் சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட உண்மை என்பது நன்றாகவே தெரியும்.
அதையும் விட மோசமானது, ஜோதிகுமரன் செய்த ஊழலை விசாரிக்க இந்திய ஹாக்கி கூட்டமைப்பின் தலைவர் கே.பி.எஸ். கில் அறிவித்துள்ள விசாரணைக் குழு. ஜோதிகுமரனின் ஊழலிற்குப் பொறுப்பேற்று பதவி விலக வேண்டியவர், அது குறித்து விசாரணை குழு அமைப்பது நேர்மையான நடவடிக்கையல்ல.
இந்திய ஹாக்கி கூட்டமைப்பு என்றாலே கில்லும், ஜோதிகுமரனும்தான் என்பது எல்லோருக்கும் தெரியும். இவர்கள் இருவரும் வைத்ததுதான் அங்கு நடைமுறைச் சட்டம். ஜோதிகுமரன் விவகாரம் வெளிவந்த மறுநாளே அறிக்கை வெளியிட்ட இந்திய ஹாக்கி கூட்டமைப்பின் துணை செயலர் கிருஷ்ணமூர்த்தி, இந்திய ஹாக்கி கூட்டமைப்பின் நிர்வாகத்தில் எதுவுமே வெளிப்படையாக நடக்கவில்லை என்பதே இதன்மூலம் வெளிப்பட்டுள்ளதாகக் கூறினார்.
எனவே, மத்திய அரசின் விளையாட்டுத் துறையும், வரும் 28ஆம் தேதி கூடவுள்ள இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் செயற்குழுவும் முதல் வேலையாக இந்திய ஹாக்கி கூட்டமைப்பின் இன்றைய நிர்வாகத்தை முழுமையாக நீக்க வேண்டும்.
|