1983 ஆம் ஆண்டில் நடந்த உலக மகளிர் ஹாக்கிப் போட்டிகள் இந்த செயற்கைப் புல் களத்தில்தான் நடத்தப்பட்டது. அதன் பிறகு 13 ஆண்டுகள் கழித்துதான் அட்லாண்டா ஒலிம்பிக் போட்டிகளில் செயற்கைப் புல் களத்தில் ஆடவர் ஹாக்கிப் போட்டிகள் நடத்தப்பட்டன்.
எதிர்காலத்தில் ஹாக்கிப் போட்டிகள் செயற்கைப் புல் களங்களில்தான் நடத்தப்படும் என்பது நன்கு முன்னறிவிக்கப்பட்டும், அதனை அமைப்பதற்காக எந்தத் தீவிரத்தையும் இந்திய ஹாக்கி கூட்டமைப்பு காட்டவில்லை.
விதிமுறைகள் மாற்றப்பட்டதால் ஹாக்கியை ஆடுவதில் ஏற்பட்ட மாற்றங்களை இந்திய, பாகிஸ்தான் விளையாட்டு வீரர்கள் படுவேகமாக மாற்றிக் கொண்டனர். ஆனால், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட செயற்கை புல் கள வசதி மிக மிகக் குறைவாக இருந்ததால் அதில் பயிற்சி பெறும் வாய்ப்பு அவர்களுக்கு கிட்டவேயில்லை. இந்த உண்மைகள் எல்லாம் நீண்ட காலமாகவே வசதியாக மறைக்கப்பட்டு, நமது வீரர்களின் திறமையின்மையே காரணம் என்று பேசப்பட்டது.
இன்றைக்கு எடுத்துக் கொள்ளுங்கள், ஒலிம்பிக் தகுதிச் சுற்றுப் போட்டிகளின் சுழல் சுற்றிலும் பிறகு இறுதியிலும் இந்தியாவை வென்ற இங்கிலாந்தில் உள்ள செயற்கை புல் களங்கள் 600. ஆனால் இந்தியாவில் - இன்றைக்கு உள்ளது எத்தனைத் தெரியுமா? வெறும் 20 மட்டுமே! எப்படியிருக்கிறது உண்மை?
நமது மாநிலத்தில் - பஞ்சாபிற்கு அடுத்தப்படியாக, கர்நாடகத்திற்கு இணையாக அதிக ஹாக்கி வீரர்களை உருவாக்கும் - தமிழ்நாட்டில் இன்று உள்ளது வெறும் 3 செயற்கை புல் களங்களே!
ஒன்று சென்னை எழும்பூரிலுள்ள மேயர் ராதாகிருஷ்ணன் மைதானம், மற்றொன்று நெல்லையில் உள்ள கல்லூரியில் - இது சமீபத்தில் இடப்பட்டது. ஏற்கனவே ராதாகிருஷ்ணன் மைதானத்தில் இருந்து பிரித்தெடுக்கப்பட்டது சென்னை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் போடப்பட்டுள்ளது.
பெங்களுரில் ஒரு செயற்கை புல் கள மைதானம் உள்ளது. மிக அதிக அளவிற்கு (ஆனால் போதுமான அளவிற்கு இல்லை) பஞ்சாபிலும், டெல்லியிலுமே உள்ளன.
மிக அருமையான ஹாக்கி விரர்களை உருவாக்கிய, உருவாக்கிக் கொண்டிருக்கும் ஒரிசா, ஜார்க்கண்ட் மாநிலங்களில் இந்த வசதி எங்கு உள்ளது? கண்டுகொண்டதா இந்திய ஹாக்கிக் கூட்டமைப்பு?
ஹாக்கி கூட்டமைப்பும் கண்டுகொள்ளவில்லை, மத்திய இளைஞர் - விளையாட்டுத் துறையும் கண்டு கொள்ளவில்லை. சென்னையில் தெற்காசிய நாடுகளின் கூட்டமைப்பு விளையாட்டு நடைபெற்ற போது, அப்பொழுது தமிழக முதலமைச்சராக இருந்த செல்வி ஜெயல்லிதா ஆர்வத்துடன் மேற்கொண்ட முயற்சியினால் மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் புதிதாக, தரம் வாய்ந்த ஆஸ்ட்ரோ டர்ஃப் இடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
விளையாட்டு வசதிகளை மேம்படுத்த செல்வி ஜெயலலிதா காட்டிய ஆர்வத்தை மற்ற மாநில முதல்வர்கள் அன்றைக்குக் காட்டியிருந்தால் இன்றைக்கு திறமையான பல ஹாக்கி வீரர்கள் இந்தியாவிற்குக் கிடைத்திருப்பார்கள்.
எனவே, ஹாக்கி விளையாட்டில் ஏற்பட்ட மாற்றங்களுக்கும், முன்னேற்றங்களுக்கும் நமது நாடு எந்த வகையிலும் ஈடுகொடுக்கவில்லை.
பிறகு என்னதான் செய்தது இந்திய ஹாக்கி கூட்டமைப்பு என்று கேட்கத் தோன்றுகிறதா? நாளை பார்ப்போம்.
இந்திய ஹாக்கியின் வீழ்ச்சிக்கு வித்திட்டது.... 1
|