மதத்தில் இருந்து கற்பு, ஆடை என்று தன்னை தொடர்ந்து சர்ச்சைகளுக்குள் சிக்கவைப்பதால் இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெறும் டென்னிஸ் ஆட்டங்களில் பங்கேற்க மாட்டேன் என்று சானியா மிர்சா அறிவித்திருப்பது பெரிய சர்ச்சையை கிளப்பியுள்ளது என்றாலும் நடந்தவற்றை நன்கு அறிந்தவர்கள் அவர் முடிவு சரியானதே என்று நிச்சயம் கூறுவார்கள்.
முன்னாள் வீரர்கள் அவருக்கு அறிவுரை வழங்கத் துவங்கியுள்ளனர். லியாண்டர் பயஸ் கூட சானியா மிர்சா புகழினால் ஏற்படும் நெருக்கடிகளை சமாளிக்கப் பழகிக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.
விஜய் அமிர்தராஜ் "எங்களது காலத்தில் இந்தியாவில் விளையாடுவது என்பது ஒரு பெரிய விஷயம்” என்று கூறியுள்ளார்.
முன்னாள் டேவிஸ் கோப்பை இந்திய டென்னிஸ் அணித் தலைவர் அக்தர் அலி மட்டுமே சானியா மிர்சாவின் இந்த நடவடிக்கை குறித்து ஆதரவான பதிலை வெளியிட்டுள்ளார். "இந்தியாவில் விளையாட மாட்டேன் என்று ஒருவர் கூறுகிறார் என்றால் அது இந்திய விளையாட்டிற்கு ஒரு சோகமான நாள்தான். சிலர் அவரை வேண்டுமென்றே சர்ச்சைகளில் சிக்க வைக்கின்றனர். இவையெல்லாம் வெறும் அரசியல்" என்று கடுமையாக சாடியுள்ளார்.
நம் நாட்டின் விளையாட்டுத் துறையில் பலருக்கு தாக்கமாக இருந்து வரும் ஒரு வீராங்கனைக்கு நாம் பிரச்சனைகளையே பரிசாக அளிக்கிறோம் என்கிறார் அக்தர் அலி.
சானியா மிர்சா டென்னிஸ் ஆட்டத்திற்காக போட்டுக் கொள்ளும் உடை "ஆபாசமாக" இருக்கிறது என்று இஸ்லாமிய மதக்குருக்கள் சர்ச்சைகளை கிளப்புகின்றனர். தேசியக் கொடியை அவமிதித்து விட்டார் என்று ஒரு சிலர் வழக்கு தொடர்கின்றனர்.
இஸ்ரேல் வீராங்கனை ஷாஹர் பியருடன் இரட்டையர் இணையாக தொழில் - விளையாட்டு ரீதியாக இணைந்ததற்கு முஸ்லிம்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் தனக்கு தகுந்த வெற்றி இணையை சானியா கைவிடவேண்டி வந்தது.
ஆஸ்ட்ரேலியன் ஓபன் டென்னிஸ் தொடரில் இருவரையும் சேர்ந்து டென்னிஸ் ஆட விடாமல் சில பிரிவினர் தடுத்தனர். சானியா டென்னிஸ் போட்டியில் அணியும் உடைகள் இஸ்லாத்திற்கு எதிரானது என்று அடிப்படைவாத இஸ்லாமியர்கள் போர்க்கொடி தூக்கினர். ஒரு சில மூடர்கள் கொலை மிரட்டலையும் விடுத்தனர்.
கொல்கத்தாவில் நடைபெற்ற டென்னிஸ் தொடரின் போது உலக மகளிர் டென்னிஸ் கூட்டமைப்பு சானியா மிர்சாவிற்கு மெய்க்காவலர்களை நியமித்தது.
விளம்பரங்களில் நடிப்பதன் மூலம் கிடைத்து வந்த வருவாய் இந்த சர்ச்சைகளினாலும் அதற்கு தூபம் போடும் ஊடகங்களாலும் நின்று போனது.
நம் சுதந்திரத் திருநாட்டில் பேச்சுரிமை பேச்சுரிமை என்ற ஒன்று இருக்கிறது. இதற்கு எந்த மத அமைப்புகளும் தடை போட முடியாது. அந்த பேச்சுரிமையை நம்பி சானியாவும் செக்ஸ் பற்றி ஒரு கருத்தை வெளியிட்டார். அதாவது பாதுகாப்பான செக்ஸின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். உடனே இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் நகரங்களில் முஸ்லிம்கள் கண்டன ஊர்வலம் நடத்தினர், மிர்சாவை இஸ்லாத்திலிருந்து வெளியேற்றுங்கள் போன்ற கோஷங்கள் வன்முறையாக எழும்பின.
இந்திய பெண்களை சானியா மிர்சா கெடுக்கிறார் என்ற அபத்தவாத கோஷங்கள் ஆங்காங்கே ஊடகங்கள் மூலம் பரப்பப்பட்டன. உடனே நிலைமைகளை அமைதிப்படுத்த "திருமணத்திற்கு முன்பு செக்ஸ் வைத்துக் கொள்வதை நான் எதிர்க்கிறேன், இஸ்லாத்தில் இது ஒரு மிகப்பெரிய பாவம், கடவுள் ஒரு நாளும் இதை மன்னிக்கமாட்டார்" என்று சானியா கூறவேண்டி வந்தது.
|