முதன்மை பக்கம்  விளையாட்டு > விளையாட்டு > கட்டுரைகள்
 
தலை நிமிரச் செய்த டோலா பானர்ஜி!
K. Ayyanathan
துபாயில் நடந்த உலக வில் வித்தைப் போட்டியில் மகளிர் தனி நபர் ரீகர்வ் போட்டியில் இந்திய வீராங்கனை டோலா பானர்ஜி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளது பெருமைக்குறியது மட்டுமின்றி, இந்திய இளைஞர்கள் ஒவ்வொருவரையும் சிந்திக்கத் தூண்டுவதாகும்.

இது ஒரே இடத்தில் சில சுற்றுகள் நடத்தபட்டு, அதில் அதிர்ஷ்டத்தின் துணையுடன் இறுதிக்குத் தகுதிபெற்று, அதில் எதிர் போட்டியாளர் அன்றைய தினத்தில் சோபிக்காத்தால் கிடைத்த வெற்றியால் டோலா பானர்ஜி சாம்பியனாகி விடவில்லை. இப்போட்டிகளின் துவக்கச் சுற்றுகள் தென் கொரியாவில் துவங்கி, பிறகு துருக்கி, இத்தாலி, இங்கிலாந்து நாடுகளில் நடந்துள்ளது. இவற்றிலெல்லாம் வெற்றி பெற்று கடைசியாக துபாயில் நடந்த இறுதிச் சுற்றுப் போட்டிகளுக்கு டோலா பானர்ஜி தகுதி பெற்றுள்ளார்.

இறுதிச் சுற்றுகளுக்கு தகுதி பெற்ற ஒரே இந்திய வீராங்கனையான டோலா பானர்ஜி, ஒவ்வொரு சுற்றிலும் கடுமையான போட்டிகளைச் சந்தித்துள்ளார். அரையிறுதியில் ரஷ்யாவின் நாட்டாலியா எர்டினியீவாவை 108-106 என்ற புள்ளிகள் கணக்கில் வென்று இறுதிக்குத் தகுதி பெற்றார்.

இறுதிப் போட்டியில் கொரிய வீராங்கனை யூன் யங் சோய்யின் கடுமையான சவாலை எதிர்கொண்டு 110-109 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றிபெற்று உலக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.

சர்வதேச அளவில் நடந்த வில்வித்தைப் போட்டிகளில் டோலா பானர்ஜி பல முறை வென்று நமது நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ளார் என்றாலும், உலக அளவில் நமது நாட்டவர் இப்பெருமையைப் பெறுவது இதுவே முதல் முறையாகும்.

ரஷ்யா, கொரியா போன்ற நாடுகளில் உள்ளது போன்றோ அல்லது அந்நாட்டு அரசுகள் அளிக்கும் உதவிகள் மற்றும் வசதிகளோ இல்லாத, கிட்டாத நமது நாட்டில் இருந்துச் சென்று உலக சாம்பியன் பட்டத்தை வெல்வதென்பது நிச்சயம் கற்பனைக்கூட எட்டாத்துதான். அதனை டோலா பானர்ஜி சாதித்துள்ளதுதான் ஆச்சரியப்படவைக்கிறது.

அடுத்த ஆண்டு சீனத் தலைநகர் பீஜிங்கில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வெல்லக் கூடிய வாய்ப்பை டோலா நிச்சயம் பெறுவார். அதுவே தனது குறிக்கோள் என்றும், அதனை நோக்கியே தான் பயிற்சியில் ஈடுபடப்போவதாகவும் டோலா பானர்ஜி கூறியுள்ளார்.
  1 | 2  >>