சாலஞ்சர் டிராபி தொடரின் 2-வதுல் ஒருநாள் ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய கிரீன் அணியை வீழ்த்தியது இந்திய ரெட் அணி.
இதன் மூலம் இரண்டு ஆட்டங்களில் வெற்றி பெற்று இறுதிப் போட்டி இடத்தை உறுதி செய்தது இந்தியா ரெட் அணி, இந்த அணிக்கு கேப்டன் கவுதம் கம்பீர். இந்தியா கிரீன் அணிக்கு கேப்டன் ஹர்பஜன் சிங்.
நாகபுரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இந்திய கிரீன் அணி 37.5 ஓவர்களில் 170 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பின்னர் இந்திய ரெட் அணி பேட் செய்தபோது, மழை குறுக்கிட்டதால் ஆட்டம் 42 ஓவர்களாகக் குறைக்கப்பட்டு 152 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. 29 ஓவர்களில் இந்திய ரெட் அணி 2 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டியது.
முன்னதாக டாஸ் வென்ற இந்திய ரெட் அணி பீல்டிங்கைத் தேர்வு செய்தது. இதையடுத்து பேட் செய்த இந்திய கிரீன் அணியில் அதிகபட்சமாக உத்தப்பா 56 ரன்களும், அனிருத்தா 37 ரன்களும், முகமது கைப் 29 ரன்களும் எடுத்தனர்.
மற்ற வீரர்கள் விரைவாக வெளியேறியதால் அந்த அணி 37.5 ஓவர்களில் 170 ரன்களுக்கு சுருண்டது. இந்திய ரெட் அணி தரப்பில் யூசுப் பதான் 4 விக்கெட் வீழ்த்தினார்.
பின்னர் ஆடிய இந்திய ரெட் அணியில் அபினவ் முகுந்தும், கம்பீரும் சிறப்பான தொடக்கம் ஏற்படுத்தினர். அந்த அணி 100 ரன்களை எட்டியபோது கம்பீர் 57 ரன்களில் வெளியேறினார்.
முகுந்த் 61 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அந்த அணி 29 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 152 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது. ராயுடு 16, யூசுப் பதான் 7 ரன்களும் எடுத்து களத்தில் இருந்தனர்.
இந்திய கிரீன் அணி தரப்பில் மிதுன், சௌத்ரி ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.