2010 ஐ.பி.எல் தொடரில் பாக். வீரர்கள் பங்கேற்க அனுமதி
கராச்சி, வியாழன், 5 நவம்பர் 2009( 13:09 IST )
இந்தியாவில் 2010ஆம் ஆண்டு நடைபெறும் ஐ.பி.எல் தொடரில் விளையாட பாகிஸ்தான் வீரர்களுக்கு அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அனுமதி வழங்கியுள்ளது.
இதுதொடர்பாக கராச்சியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் இஜாஸ் பட், “2010இல் நடைபெறும் ஐ.பி.எல். தொடரில் பாகிஸ்தான் வீரர்கள் விளையாட பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அனுமதி வழங்கியது பற்றி ஐ.பி.எல் ஆணையர் லலித் மோடியிடம் இந்தியாவில் நடந்த சந்திப்பின் போது தெரிவித்துள்ளேன்.
2010 ஐ.பி.எல் தொடரில் பாகிஸ்தான் வீரர்கள் பங்கேற்கத் தேவையான அனுமதியை ஐ.பி.எல். அமைப்பு வழங்க வேண்டும் என்றும் அவரிடம் வலியுறுத்தினேன்” என்றார்.
மும்பை பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றம் ஏற்பட்டதால், நடப்பாண்டு நடந்த ஐ.பி.எல் தொடரில் பாகிஸ்தான் வீரர்கள் பங்கேற்க வேண்டாம் என அந்நாட்டு அயலுறவு விவகாரத்துறை அமைச்சகம் வலியுறுத்தியதன் பேரில் பாகிஸ்தான் வீரர்கள் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.