ஆஸ்ட்ரேலிய வேகப்பந்து வீச்சாளர் பிரட் லீ, தான் அடிக்கடி காயமடைந்தாலும் தன் கிரிக்கெட் வாழ்வு முடிவடைந்து விடாது என்று கூறியுள்ளார். தற்போது 3-வது ஒரு நாள் போட்டியில் நாளை பங்கேற்க காயத்தின் நிலை பற்றி அறிந்து கொள்ள வலைப்பயிற்சியில் பந்து வீசி வருகிறார் பிரட் லீ.
ஆஸ்ட்ரேலியா டெஸ்ட் அணியில் மீண்டும் இடம்பிடிப்பது தன் முதன்மை குறிக்கோளாக இருப்பினும், அதற்காக ஒரு நாள், இருபதுக்கு 20 கிரிக்கெட் ஆட்டங்களை தியாகம் செய்யும் எண்ணமுமில்லை என்று கூறியுள்ளார் பிரட் லீ.
"10, 15 ஆண்டுகளாக தொடர்ந்து 150 கி.மீ. வேகத்தில் வீசுகிறேன். அதனால் காயங்கள் ஏற்படுவது இயற்கை. ஆனால் நான் இன்னும் முடிந்துவிடவில்லை. நான் புத்துணர்வுடன் இருக்கிறேன், என்னிடம் இன்னும் நிறைய ஆண்டுகளுக்கான தெம்பு இருக்கிறது.
நாட்டிற்கு விளையாட கிடைக்கும் வாய்ப்பு சிறப்பானதாகும். அதனை நான் விட்டு விட விரும்பவில்லை. அதே சமயத்தில் ஒரு நாள், இருபதுக்கு 20 தொடர்களிலும் நாட்டிற்காக விளையாட ஆசைப்படுகிறேன், ஆனால் இப்போதைக்கு டெஸ்ட் அணியில் மீண்டும் நிரூபிக்க ஆவலாயிருக்கிறேன்.
சாம்பியன் லீக் கிரிக்கெட்டினால் இந்த காயம் ஏற்படவில்லை. இவ்வாறு கூறியுள்ளார் பிரட் லீ.