நாக்பூரில் நடைபெறும் 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் தோனி எடுத்த 124 ரன்கள், கம்பீரின் 74 ரன்கள், ரெய்னாவின் 62 ரன்கள் ஆகியவற்றால் ஆஸ்ட்ரேலியாவிற்கு எதிராக இந்தியா 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 354 ரன்கள் குவித்துள்ளது. ஆஸ்ட்ரேலிய அணிக்கு எதிராக ஒரு நாள் போட்டிகளில் இந்தியா எடுக்கும் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.
ஆஸ்ட்ரேலிய அணிக்கு எதிராக எதிரணி கேப்டன் ஒருவர் எடுக்கும் அதிகபட்ச ரன்கள் என்ற சாதானியை தோனி நிகழ்த்தியுள்ளார். அவர் 107 பந்துகளில் 9 பவுண்டரிகள் 3 சிக்சர்கள் சகிதம் இந்த 124 ரன்களை எடுத்து சாதனை புரிந்தார்.
முதல் 50 ரன்களை 55 பந்துகளில் 3 பவுண்டரிகள் மட்டுமே அடித்து எடுத்திருந்த தோனி அடுத்த 46 பந்துகளில் மேலும் 6 பவுண்டரிகளையும் 3 அபாரமான சிசர்களையும் அடித்து 74 ரன்களை விளாசினார்.
30-வது ஓவரில் பவர் பிளே எடுத்தார் தோனி அப்போடு ஸ்கோர் 240ஆக இருந்தது. கடைசியில் ரெய்னாவும் தோனியும் அனாயச மட்டை சுழற்றலில் இறங்க 114 ரன்களை இந்தியா விளாசியது.
முன்னதாக சச்சின் விரைவில் பெவிலியன் திரும்ப, சேவாக் மிட்செல் ஜான்சனை வெறுப்பேற்றும் விதமாக ஒரு சிக்சரை அடித்து 40 ரன்களில் மிட் ஆஃப் திசையில் தூக்கி அடிக்க முயன்று ஜான்சனிடமே விக்கெட்டை பறிகொடுத்தார்.
யுவ்ராஜ் சிங் களமிறங்கி அபாரமாக 2 பவுண்டரிகளையும் நேதன் ஹாரிட்ஸ் பந்தில் அவருக்கேயுரிய பாணியில் நேராக ஒரு சிக்சரையும் அடித்து ஹில்ஃபென் ஹாசின் பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தபோது இந்தியா சற்றே கவலைக்குரிய 97/3 என்ற நிலையில் இருந்தது.
ஆனால் அதன் பிறகுதான் இந்த ஆட்டத்தை மாற்றக்கூடிய ஜோடி சேர்ந்தது. தோனியும் கம்பீரும் இணைந்து பெரிய ஷாட்களை தவிர்த்து, பந்துகளை தெளிவாக தரையோடு இடைவெளியில் அடித்து ஒன்று இரண்டு, என்று ரன்களை குவித்தனர். ஆட்டத்தின் எந்த நிலையிலும் ஓவருக்கு 6 ரன்கள் என்பது குறைய விடவில்லை.
19 ஓவர்களில் இருவரும் இணைந்து 119 ரன்களை குவித்தனர். கம்பீர் தொடர்ந்து தனது இரண்டாவது அரை சதத்தை எடுத்து 6 பவுண்டரிகளுடன் 76 ரன்களில் இருந்த போது தேவையற்ற முறையில் ரன் -அவுட் ஆனார்.
அதன் பிறகு சிறிது நேரம் ரெய்னா மட்டை வைத்தார். ரன்கள் அப்போதுதான் சற்றே குறைய ஆரம்பித்தது. ஆனால் 39-வது ஓவரை பவர் பிளேயாக தோனி எடுக்கவும் ரன்கள் மழை தொடங்கியது.
தோனி அடித்த 3 சிக்சர்களில் ஒன்று மிகவும் ஃபிளாட்டாக மிட் ஆன் திசையில் அடிக்கப்பட்டது. ஹில்ஃபென் ஹாஸ் வீசிய பந்து அது. அதன் பிறகு ஷேன் வாட்சன் பந்தை அடுத்தடுத்து இரண்டு சிக்சர்களுக்கு தூக்கினார். இதில் ஒன்றுதான் அவர் சதம் எடுக்க உதவிய சிக்சர்.
ரெய்னா, மிட்செல் ஜான்சன் பந்துகளை பதம் பார்த்தார். அவர் 50 பந்துகளில் 6 பவுண்டரிகள் ஒரு சிக்சர் சகிதம் 62 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
முதலில் சேவாகிடம் வாங்கிக் கட்டிக் கொண்ட ஹில்ஃபென் ஹாஸ் 10 ஓவர்களில் 83 ரன்கள் கொடுத்தார்.
சிடில் சிறப்பாக வீசி 10 ஓவர்களில் 55 ரன்கள் கொடுத்தார். ஜான்சன் மீண்டும் 75 ரன்களை விட்டுக் கொடுத்து தேவையில்லாத நேரமான கடைசி ஓவரில் இரண்டு விக்கெட்டுகள் உட்பட 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
நேதன் ஹாரிட்ஸ் சிறப்பாக வீசி 10 ஓவர்களில் 54 ரன்கள் கொடுத்தார்.
ஆஸ்ட்ரேலிய பந்து வீச்சாளர்கள் 14 வைடுகளையும் இரண்டு நோ-பால்களையும் வீசி 23 ரன்களை உதிரி வகையில் கொடுத்தனர்.
உணவு இடைவேளைக்குப் பின் இலக்கை துரத்த ஆஸ்ட்ரேலியா களமிறங்கும்.