கால்லேயில் நடைபெறும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் வீச்சாளர் மொகமட் ஆமீர் வர்ணபுரா, சங்கக்காரா, தில்ஷான் விக்கெட்டுகளை வீழ்த்த இலங்கை அணி தன் முதல் இன்னிங்ஸில் விக்கெட்டுகளை மளமளவென்று இழந்து 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 271 ரன்கள் எடுத்துள்ளது.
கேட்ச் கோட்டை விடப்பட்ட பரனவிதனா மட்டுமே அதிகபட்சமாக 72 ரன்களை எடுத்தார். இவர் ஆட்டமிழந்தவுடன் சமரவீராவும் (31) தில்ஷானும் (28) இலங்கை அணிக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக விளையாடினார். ஆனால் சமரவீரா விக்கெட்டை கேப்டன் யூனிஸ் கான் வீழ்த்தினார்.
அதன் பிறகு மேத்த்யூசும், தில்ஷானும் மேலும் 34 ரன்கள் சேர்த்தனர். அப்போது 28 ரன்கள் எடுத்து விளையாடி வந்த அபாய வீரர் தில்ஷானை, புது முக வேகப்பந்து வீச்சாளர் ஆமீர் வீழ்த்தினார்.
ஆனால் அதன் பிறகு மேத்யூசும், குலசேகராவும் இணைந்து ஸ்கோரை 241 ரன்களுக்கு உயர்த்தினர் அப்போது 6 பவுண்டரிகளுடன் 42 பயனுள்ள ரன்களை எடுத்த மேத்யூஸ் உமர் குல்லின் ஒரே விக்கெட்டாக வீழ்ந்தார்.
குலசேகரா 5 பவுண்டரிகள் ஒரு சிக்சருடன் 38 ரன்கள் எடுத்து சற்று முன் கேப்டன் யூனிஸ் கானின் 2-வது விக்கெட்டாக வீழ்ந்தார்.
பாகிஸ்தான் அண்யில் ஆமிர் 3 விக்கெட்டுகளையும், யூனிஸ் கான், அப்துர் ராஃப் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர். இன்றைய தினத்தில் இன்னமும் 12 ஓவர்கள் மீதமுள்ளன. |