ஐ.சி.சி.-யின் எதிர்கால கிரிக்கெட் பயணத் திட்டத்தில் பாகிஸ்தான் அணியை தனிமைப் படுத்த முயற்சி நடப்பதாகவும் இந்தியா, ஆஸ்ட்ரேலியா, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து ஆகிய பணக்கார கிரிக்கெட் வாரியங்கள் தங்கள் நாடை புறக்கணிப்பதாகவும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் குற்றம் சாட்டியுள்ளது.
2012ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு வரையிலான கிரிக்கெட் தொடர்களை திட்டமிட்டு ஐ.சி.சி. பயணத் திட்ட விவரங்களை வெளியிடவிருந்தது. இதில் பாகிஸ்தானுக்கு எதிரான தொடர்கள் பெரிய அளவில் இல்லை என்றும் குறிப்பாக பி.சி.சி.ஐ. தன் திட்டத்தில் பாகிஸ்தானுடன் கிரிக்கெட் தொடர்கள் எதையும் குறிப்பிடவில்லை, இது கண்டனத்திற்குரியது என்று பாகிஸ்தான் கண்டனம் வெளியிட்டுள்ளது.
மேலும் இந்த எதிர்கால பயணத்திட்ட வரைவை மாற்றவில்லையெனில் தாங்கள் கையெழுத்திட மாட்டோம் என்றும் அந்த கிரிக்கெட் வாரியம் எச்சரித்துள்ளது.
ஐ.சி.சி.யின் பணக்கார கிரிக்கெட் வாரியங்களான இந்தியா, ஆஸ்ட்ரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா ஆகியவை கார்ப்பரேட் முறையில் கூட்டிணைந்து இந்த புறக்கணிப்பை செய்கின்றன என்றும் இந்த புறக்கணிப்பிற்கு பின்னால் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் கை இருப்பதாகவும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் குற்றம்சாட்டியுள்ளது.
|