சாலஞ்சர் தொடர் உள்நாட்டு ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் யுவ்ராஜ் சிங் தலைமையிலான இந்தியா ப்ளூ அணி, பத்ரிநாத் தலைமையிலான இந்தியா ரெட் அணியை 49 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
பகலிரவு ஆட்டமாக நேற்று கட்டாக் நகரில் நடந்த இப்போட்டியில், பூவா தலையா வென்ற இந்தியா ப்ளூ அணி முதலில் பேட் செய்தது.
ராபின் உத்தப்பா சிறப்பக விளையாடி 106 பந்துகளில் 9 பவுண்டரிகள் ஒரு சிக்சருடன் 94 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அணித்தலைவர் யுவ்ராஜ் சிங் 6 ரன்களில் ஆட்டமிழந்தார். தினேஷ் கார்த்திக் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். இர்ஃபான் பத்தான் 44 பந்துகளில் 43 ரன்களை விளாசினார். நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் அந்த அணி 9 விக்கெட் இழப்புக்கு 239 ரன்கள் எடுத்தது.
இந்தியா ரெட் அணி தரப்பில் பிரவீன்குமார், சுழற்பந்து வீச்சாளர் எம்.பி.பார்மர், எல்.பாலாஜி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ரோஹித் ஷர்மா ஒரு விக்கெட் வீழ்த்தினார்.
வெற்றி பெற 240 ரன்கள் என்ற சுமாரான இலக்குடன் களமிறங்கிய இந்தியா ரெட் அணிக்கு தமிழகத்தை சேர்ந்த துவக்க வீரர் விஜய் சிறப்பான துவக்கத்தை அளித்தாலும், மறுமுனையில் விக்கெட்டுகள் அடுத்தடுத்து சரிந்தது.
ஐந்தாவது விக்கெட்டுக்கு இணைந்த விஜய்-மனோஜ் திவாரி ஜோடி ஒரளவு சமாளித்து 78 ரன்களை சேர்த்தது. எனினும் 89 ரன்கள் எடுத்த நிலையில் விஜய் ஆட்டமிழந்ததால் இந்திய ரெட் அணி சரிவைச் சந்தித்தது. ஆட்டத்தின் 45.3வது ஓவரில் அந்த அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 186 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இந்தியா ப்ளூ தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இன்று (வெள்ளி) நடைபெற உள்ள போட்டியில் இந்தியா ரெட் அணி, க்ரீன் அணியை எதிர்த்து விளையாட உள்ளது. |