சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஆட்ட நடுவர்கள் ஆசியாவைச் சேர்ந்த வீரர்கள் மீது மட்டும் கடும் நடவடிக்கை எடுப்பது ஏன் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சுனில் கவாஸ்கர் கேள்வி எழுப்பியுள்ளார். மொஹாலி போட்டியின் போது ஆஸ்ட்ரேலிய வீரர் மேத்யூ ஹைடனை திட்டியதாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து ஜாகீர்கானுக்கு அபாராதம் விதித்துள்ள ஐ.சி.சி. அதே போட்டியில் நடுவர் அளித்த தீர்ப்பை ஏற்காமல் அவருடன் விவாதம் செய்த ரிக்கி பாண்டிங் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று அவர் கேட்டுள்ளார். இதுதொடர்பாக மும்பையில் அவர் அளித்துள்ள பேட்டியில், ஹைடனை ஜாகீர்கான் திட்டியிருந்தால் அவருக்கு (ஜாகீர்) தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை. ஆனால் அதே போட்டியில், இந்தியா 2வது இன்னிங்ஸ் விளையாடிய போது சேவாக் அவுட்-இல்லை என நடுவர் அறிவித்த பின்னரும் எக்ஸ்ட்ரா-கவர் பகுதியில் நின்றிருந்த ரிக்கி பாண்டிங் நடுவரின் அருகே வந்து விவாதம் செய்ததை ஏன் தண்டிக்கவில்லை. இதுவே ஒரு இந்திய வீரர் அதுபோன்ற செயலில் ஈடுபட்டிருந்தால் ஐ.சி.சி. தண்டிக்காமல் இருக்குமா என்று கேட்டுள்ளார்.சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இதுபோல் பல்வேறு சம்பவங்கள் நடந்திருந்தாலும், ஆசியாவைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்களே ஐ.சி.சி-யால் அதிகம் தண்டிக்கப்படுகின்றனர். இந்த விஷயத்தில் இரட்டைநிலை கடைபிடிப்பதை ஐ.சி.சி. மாற்றிக் கொள்ள வேண்டும் என கவாஸ்கர் வலியுறுத்தியுள்ளார். |
தேடல் தொடர்பான தகவல்கள் |