மொஹாலி டெஸ்டில் 4-ம் நாள் ஆட்டத்தின் போது உணவு இடைவேளை வரை பிரட் லீயை பந்து வீச அழைக்காதது குறித்து தனக்கும் பிரட் லீயிற்கும் கருத்து வேறுபட்டுகள் தோன்றியதாக கூறப்படும் செய்திகளை ஆஸ்ட்ரேலிய அணித் தலைவர் ரிக்கி பாண்டிங் மறுத்துள்ளார்.
"என்ன நடந்தது என்பது குறித்து எழுதப்படுவது சற்றே மிகைப்படுத்தப்பட்ட ஒன்று" என்று கூறிய பாண்டிங், காலையில் பிரட் லீ பந்து வீசப் போவதில்லை என்பதை பிரட் லீயிடம் தான் ஏற்கனவே தெரிவித்து விட்டதாக கூறினார்.
ஆனால் மைக் ஹஸ்ஸியை பந்து வீச அழைத்தவுடன் பிரட் லீ சற்றே ஆத்திரமடைந்தது போல்தான் தெரிந்தது. பாண்டிங்குடன் காரசார பேச்சு எழுந்தது, இதில் பாண்டிங் ஏதோ கூற முயல பிரட் லீ காதில் வாங்காமல் அந்த இடத்திலிருந்து நகர்ந்தார்.
முழு வேகத்துடன் வீசாமல் மெதுவாக வீசும் வீச்சாளர்களை பயன்படுத்தப் போகிறேன் என்ற முடிவை காலையில் 11.00 மணி வரை லீயிடம் தான் தெரிவிக்காததுதான் பிரச்சனைக்குக் காரணம் என்றார் பாண்டிங்.
பிரட் லீ இந்த தொடரில் இது வரை 75 ஓவர்கள் வீசி வெறும் 4 விக்கெட்டுஅகளையே கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தொடரில் அடுத்த டெஸ்டிற்கு பிரட் லீ அணியில் இடம்பெறுவாரா என்ற கேள்விக்கு பதில் அளித்த பாண்டிங், பிரட் லீ ஒரு சாம்பியன். அவரை அவ்வளவு எளிதாக மதிப்பிட முடியாது என்றார்.
அதே போல் மேத்யூ ஹெய்டன் பற்றிய கேள்விக்கும் பதில் அளிக்கையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் 55 ரன்கள் சராசரி வைத்திருக்கும் அவரும் ஒரு சாம்பியன் வீரர், அவர் குறித்தெல்லாம் அவ்வளவு சுலபமாக முடிவெடுக்க முடியாது என்றார். பெங்களூர் டெஸ்ட் சதம் தவிர தானும் சரியாக விளையாடாத வீரர்கள் பட்டியலில்தான் உள்ளேன் என்று சுய விமர்சனம் செய்து கொண்டார் பாண்டிங். |