ஆஸ்ட்ரேலியாவுக்கு எதிராக மொஹாலியில் நடந்து முடிந்த 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி) நடத்தை விதிமுறைகளை மீறியதற்காக இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர்கானுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மொஹாலி டெஸ்ட் போட்டியின் 4ஆம் நாள் ஆட்டத்தின் போது, ஆஸ்ட்ரேலிய துவக்க வீரர் மேத்யூ ஹைடனை ஆட்டமிழக்கச் செய்த ஜாகீர்கான், அவரின் அருகில் சென்று கத்தியதாகவும், இது ஐ.சி.சி. நடத்தை விதி பிரிவு 2ன் கீழ் உட்பிரிவு சி1-க்கு எதிரானது என்றும் விசாரணை நடத்திய ஆட்டநடுவர் கிரிஸ் போர்ட் தெரிவித்துள்ளார்.ஜாகீர்கானிடம் விசாரணை நடத்தப்பட்ட போது, போட்டியில் பங்கேற்ற நடுவர்கள், இந்திய பயிற்சியாளர் கேரி கிறிஸ்டன் ஆகியோர் உடனிருந்தனர்.போட்டியின் போது ஆட்டமிழந்த ஹைடன் களத்தில் இருந்து வெளியேறத் துவங்கிய போது, ஜாகீர்கான் அவருக்கு வெகு அருகில் சென்று உரக்கக் கத்தியதுடன், அவரை வட்டமிட்டு இந்திய வீரர்கள் கூடியிருந்த இடத்திற்கு வந்துள்ளார். இதுபோன்ற நடவடிக்கை சக வீரர்களுக்கு மரியாதையளிக்கும் விதமாக இல்லை என்பதுடன், சர்வதேச கிரிக்கெட் அரங்கில் நிச்சயம் ஏற்றுக்கொள்ள முடியாத நடவடிக்கைகளின் ஒன்று எனத் தெரிவித்துள்ள கிரிஸ் போர்டு, மொஹாலி போட்டியில் ஜாகீர்கான் பெறும் சம்பளத் தொகையில் 80 சதவீதத்தை அபராதமாக செலுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.எனினும், நடுவர் கிரிஸ் போர்டின் தீர்ப்பை எதிர்த்து முறையிட ஜாகீர்கானுக்கு 24 மணி நேரம் அவகாசம் உள்ளது குறிப்பிடத்தக்கது. |
தேடல் தொடர்பான தகவல்கள் |