ஆஸ்ட்ரேலியாவுக்கு எதிராக முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய இந்திய வீரர்களே, புதுடெல்லி மற்றும் நாக்பூரில் நடைபெற உள்ள 3வது மற்றும் 4வது டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவார்கள் என இந்திய கிரிக்கெட் வீரர் தேர்வுக்குழு அறிவித்துள்ளது.
மொஹாலியில் ஆஸ்ட்ரேலியா-இந்தியா இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 4ஆம் நாள் ஆட்டம் முடிவில், இந்திய அணியின் முன்னாள் தலைவர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் தலைமையிலான 5 உறுப்பினர்களைக் கொண்ட வீரர்கள் தேர்வுக் குழு, ஆஸ்ட்ரேலியாவுக்கு எதிரான 3 மற்றும் 4வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி வீரர்களை தேர்வு செய்யும் நோக்கத்துடன் கூடியது.
இதில், ஆஸ்ட்ரேலியாவுக்கு எதிராக முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய இந்திய அணி வீரர்களே, கடைசி 2 போட்டிகளுக்கான அணியிலும் இடம்பெறுவர் என முடிவு செய்யப்பட்டது.
இந்தியா-ஆஸ்ட்ரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி டெல்லியில் வரும் 29ஆம் தேதியும், 4வது டெஸ்ட் போட்டி நாக்பூரில் நவம்பர் 6ஆம் தேதியும் துவங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், அக்டோபர் 23-26ஆம் தேதி வரை கட்டாக் நகரில் நடைபெறும் சேலஞ்சர் கோப்பைத் தொடருக்கான அணியில் இடம்பெற்றிருந்த சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா, ஆஸ்ட்ரேலியாவுக்கு எதிரான 3,4வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ளதால், அவருக்கு பதிலாக டெல்லியைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் சிதன்யா நந்தா சேலஞ்சர் கோப்பைத் தொடருக்கான அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக பி.சி.சி.ஐ. செயலாளர் ஸ்ரீநிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |