பெங்களூரில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியாவில் தனது முதல் சதத்தை அபாரமாக எடுத்து 113 ரன்களுடன் விளையாடி வரும் பாண்டிங், நடுவரின் உதவியால் சற்று முன் தப்பித்தார்.
ஆட்டத்தின் 70-வது ஓவரை கும்ளே வீச, 2-வது பந்தை பாண்டிங் நேராக ஆட முயன்றார். யார்க்கர் லெந்தில் விழுந்த அந்த பந்தை பாண்டிங் பெயர்த்து எடுத்து ஆட அது நேராக கும்ளேயின் கையில் கேட்சாக மாறியது.
கும்ளேயும் அணி வீரர்களும் முறையீடு செய்ய, இரு நடுவர்களும் ஒருவரையொருவர் ஆலோசனை செய்கிறேன் பேர்வழி என்று திருதிருவென்று விழித்து விட்டு நாட் அவுட் என்று கூறுகின்றனர்.
தொலைக்காட்சி ரீப்ளேயில் அது அவுட் என்று தெளிவாக தெரிந்தது. சந்தேகம் இருக்கும்போது 3-வது நடுவரை கேட்க கள நடுவர் ரூடி கர்ட்சன் தவறியுள்ளார். இதனால் ஆட்டமிழந்திருக்க வேண்டிய பாண்டிங் தொடர்ந்து ஆடிக் கொண்டிருக்கிறார். ஓவரை முடித்த கும்ளே பலத்த அதிருப்தியுடன் தன் இடத்திற்கு சென்றார். தொடர்கிறது நடுவர்களின் தீர்மானமில்லாத போக்கு. |