இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் பெங்களூரில் வியாழனன்று தொடங்குகிறது. இப்போட்டியில் சச்சின் சாதனை புரிவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் மேலோங்கியுள்ளது.
ரிக்கி பாண்டிங் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இந்தியாவுக்கு எதிராக 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான முதலாவது போட்டி, பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் வியாழக்கிழமை தொடங்குகிறது.
பாகிஸ்தானுடன் நடக்கும் போட்டியை விட ஆஸ்திரேலியாவுடனான மோதல், இந்திய ரசிகர்கள் இடையே வரவேற்பை பெற்று வருவதால், இத்தொடர் விறுவிறுப்பாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
இரு அணிகளும் ஆக்ரோஷ ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றிக்கு போராடும். இந்தியத் தரப்பில் பேட்டிங்கில் கவுதம் காம்பீர், ஷேவாக் டெண்டுல்கர், டிராவிட், லட்சுமண், தோனி ஆகியோர் எதிரணிக்கு அச்சுறுத்தலாக இருப்பார்கள். பந்து வீச்சில் கும்ளே, ஹர்பஜன்சிங், இஷாந்த் சர்மா ஆகியோர் ஆஸ்திரேலியாவுக்கு சவாலாக விளங்குவார்கள் என்று நம்பலாம்.
புதுமுகங்கள் பலரைக் கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணியில் ஹைடன், அணித்தலைவர் பாண்டிங், மைக்கேல் ஹஸ்ஸி, வாட்சன், கிளார்க் ஆகியோர் சிறப்பாக ஆடி இந்தியாவுக்கு நெருக்கடி தரக்கூடும்.
சாதிப்பாரா சச்சின்?: டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் மேற்கு இந்தியத்தீவுகள் வீரர் பிரையன் லாரா, 131 டெஸ்டுகளில் விளையாடி 11,953 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார். அவரது சாதனையை முறியடிக்க சச்சினுக்கு 77 ரன்கள் மட்டுமே தேவை. 150 டெஸ்டில் 11,877 ரன்கள் (சராசரி 54.23) குவித்துள்ள சச்சின், ஆஸ்திரேலியத் தொடரில் அச்சாதனையைப் படைபார் என்று கருதப்படுகிறது.
இதனால் பெங்களூருவில் நடைபெறும் முதலாவது டெஸ்ட் போட்டி, ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. |