இந்திய சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங், ஃபாக்ஸ் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில், ஆஸ்ட்ரேலிய அணியுடன் நட்புறவுகளை உருவாக்கிக் கொள்ளப்போவதில்லை என்று கூறியதையடுத்து, ஆஸ்ட்ரேலிய துவக்க வீரர் மேத்யூ ஹெய்டன், அவர் இது போன்று கூறுவது தன்னை இன்னமும் சிறப்பாக விளையாடச் செய்யும் என்று கூறியுள்ளார்.
இன்று இரவு ஒளிபரப்பாகும் அந்த தொலைக்காட்சி நேர்காணலில், தனக்கு கிரிக்கெட் மீது அளவு கடந்த காதல் இருப்பதால், அதைப்பொறுத்தவரை தான் எந்த வித மாற்றமும் அடையவில்லை என்றும், தான் விளையாடும் ஒவ்வொரு போட்டியிலும் இந்தியாவை வெற்றி பெற வைப்பதுதான் தனது லட்சியம் எனவும் கூறியதோடு, அதற்காக போராடும் வேளையில் எந்த ஒரு நட்புறவையும் ஏற்படுத்திக் கொள்ள விரும்பவில்லை என்றும் கூறியுள்ளார்.
இது குறித்து மேத்யூ ஹெய்டன் கூறுகையில், ஹர்பஜன் இது போன்று சவாலாக திகழ்வதை தான் பாராட்டுவதாக கூறினார். தனக்கும் ஹர்பஜனுக்கும் சொந்தப் பகை எதுவும் இல்லை, அவர் ஒரு மிகச் சிறந்த பந்து வீச்சாளர், அவருக்கு எதிராக ஒவ்வொரு பந்தையும் சிறப்பாக விளையாடுவது சவாலனாதே என்றும் கூறியுள்ளார்.
மேலும், தன் விக்கெட்டை வீழ்த்த எம்மாதிரியான பந்துகளை ஹர்பஜன் வீசப் போகிறாரோ என்பதுதான் தனது அச்சமே என்று கூறிய ஹெய்டன், அதுதான் தனக்கு தூண்டுகோலாக இருக்குமே தவிர ஹர்பஜன் என்ற தனி நபர் அல்ல என்று கூறியுள்ளார். |