ஐ.பி.எல். நிலுவைத் தொகையான ரூ.3.76 கோடியை ஷாருக்கானின் ரெட் சில்லீஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்திடம் வசூலிக்க வங்காள கிரிக்கெட் சங்கத்தின் முன்னாள் தலைவர் பிரசூண் முகர்ஜீ, தற்போதிய தலைவர் ஜக்மோகன் டால்மியாவிற்கு 5 பக்க கடிதம் ஒன்றை எழுதியதன் மூலம் மோதல் ஏற்பட்டுள்ளது.
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளரான ஷாருக்கான், ரெட் சில்லீஸ் என்டர்டெய்ன்மென்ட் என்ற நிறுவனத்தை துவங்கினார். இந்த நிறுவனம் வங்காள கிரிக்கெட் வாரியத்திற்கு இன்னமும் ரூ.3.76 கோடி கொடுக்க வேண்டியுள்ளது.
"புதிய நிர்வாகம் பொறுப்பேற்று 2 மாதங்களுக்கு மேலாகியும், இந்த விவகாரத்தில் எந்த வித அவசரமும் காட்டப்படவில்லை, என்னையும் கலந்தாலோசிக்கவில்லை" என்று கூறியுள்ளார் பிரசூண் முகர்ஜீ.
"மாறாக என்னைப்பற்றி குறை கண்டுபிடிப்பதில் கவனம் செலுத்துகின்றனர்" என்று முகர்ஜீ மேலும் கூறுகையில் டால்மியாவை குற்றம்சாற்றியுள்ளார்.
முகர்ஜீயின் இந்த குற்றச்சாட்டு குறித்து வங்காள கிரிக்கெட் வாரியத்தின் இணைச் செயலர் பிஸ்வரூப் டே கூறுகையில், "நிலுவைத் தொகை தொடர்பாக எந்த வித எழுத்து பூர்வ ஆவணங்களும் இல்லை, இந்த நிலையில் ஒருவரது கடிதம் மூலம் அதனை அணுகுவது எப்படி?" என்று கேள்வி எழுப்பியுள்ளதோடு, முகர்ஜீயின் குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஒரு அடிப்படையும் இல்லை என்று கூறியுள்ளார். |