இந்தியாவுக்கு எதிரான 5வது மற்றும் இறுதி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், முதலில் பேட் செய்து வரும் இலங்கை அணி 5 விக்கெட் இழப்புக்கு 108 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. அணித்தலைவர் ஜெயவர்த்தனே 12 ரன்களில் ஆட்டமிழந்தார்.
கொழும்பில் உள்ள ஆர்.பிரேமதாஸா மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக நடந்து வரும் இப்போட்டியில், பூவா-தலையா வென்று களமிறங்கிய இலங்கை அணி, துவக்க வீரர் ஜெயசூர்யாவை ஆரம்பத்திலேயே இழந்தது.
எனினும் முதல் விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த வார்னபுரா-உதவத்தே இணை சிறப்பாக விளையாடி 77 ரன்கள் சேர்த்தது. இதில் வார்னபுரா 30 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அதே ஓவரில் 43 ரன்கள் சேர்த்திருந்த உதவத்தேவும் ஆட்டமிழந்தால் இலங்கை அணி 80 ரன்களுக்கு 3 முக்கிய விக்கெட்களை இழந்து தவித்தது.
இதையடுத்து ஜோடி சேர்ந்த சங்கக்காரா- ஜெயவர்த்தனே இணை, அணியை சரிவில் இருந்து மீட்கும் என இலங்கை ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், சங்கக்காரா ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார்.
பின்னர் கபுகேந்திராவுடன் இணைந்து விக்கெட் சரிவை தடுக்கும் முயற்சியில் அணித்தலைவர் ஜெயவர்த்தனே ஆர்வம் காட்டினார். எனினும் அவர் 12 ரன்கள் எடுத்த நிலையில் ஓஜா பந்தில் யுவராஜிடம் கேட்ச் கொடுத்து ஆவுட் ஆனார்.
இன்னிங்சின் 30வது ஓவரில் இலங்கை அணி 5 விக்கெட் இழப்புக்கு 108 ரன்கள் சேர்த்திருந்தது. கபுகேந்திரா 10 ரன்களுடனும், முபாரக் 2 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
இந்திய பந்துவீச்சாளர்களில் பதான் 2 விக்கெட்களும், ஜாகீர்கான், ஆர்.பி.சிங், பிரக்ஞான் ஓஜா தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றியுள்ளனர்.
|