ஒரு நாள் சர்வதேச போட்டிகளை மேலும் விறுவிறுப்பாக்க, விதிகளில் சில மாற்றங்களை செய்துள்ளது சர்வதேச கிரிக்கெட் பேரவை (ஐ.சி.சி).
தற்போது உள்ள விதிகளின் படி 3 பவர் ப்ளேயும் ஃபீல்டிங் செய்யும் அணித்தலைவர் தேர்ந்தெடுப்பார். ஆனால் தற்போது ஒரு பவர் ப்ளேயை பேட்டிங் அணி தேர்வு செய்து கொள்ளலாம் என்று மாற்றபட்டுள்ளது.
இரண்டு பவர் ப்ளேக்களில் ஃபீல்டிங் அணி கூடுதல் ஃபீல்டரை நிறுத்திக் கொள்ளலாம் என்ற புதிய விதி புகுத்தப்பட்டுள்ளது. தற்போது 30 அடி வட்டத்திற்கு வெளியே ஒரே ஒரு பவர் ப்ளேயின் போது மட்டும்தான் கூடுதல் ஒரு ஃபீல்டரை நிறுத்தலாம் என்ற விதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதேபோல் இருபதுக்கு 20 கிரிக்கெட்டில் போட்டி ரன்கள் அளவில் சமன், ஆனால் பௌல் அவுட் முறைக்கு பதிலாக கூடுதல் ஒரு ஓவர் முறை அமல் செய்யப்படவுள்ளது.
பீல்டிங் அணி வீரர் காயமடைந்தாலோ, அல்லது உடல் நலமின்மை காரணமாகவோ மற்றும் முழுதும் ஏற்றுக்கொள்ளக் கூடிய காரணம் ஒன்றிற்காகவோ விளையாட முடியாமல் போனால் மட்டுமே மாற்று வீரர் களம் இறங்க அனுமதிக்கப்படுவார்.
ஃபீல்டிங் செய்யும் அணியைச் சேர்ந்த வீரர்கள் நினைத்த நேரத்தில் மாற்று வீரரை களத்தில் நிறுத்தி ஓய்வறைக்குத் திரும்பும் நடவடிக்கைகளை ஒழிக்க இந்த புதிய விதி புகுத்தப்பட்டுள்ளது.
அதேபோல் ஒரு நாள் போட்டியில் முதலில் விளையாடும் அணியின் இன்னிங்ஸ் குறித்த நேரத்தில் முடியவில்லை என்றால் இன்னிங்ஸிற்கு இடையிலான இடைவேளை நேரத்தை 30 நிமிடமாக குறைக்காமல், இரு அணிகளின் தலைவர்களும் பரபஸ்பர ஒப்புதலின் பேரில் 10 நிமிடம் முதல் 30 நிமிடம் வரை இடைவேளை நேரத்தை தீர்மானித்துக் கொள்ளலாம்.
இந்த ஆட்ட இடைவேளை விதி உடனடியாக நடைமுறைக்கு வருகிறது. மற்ற விதி மாற்றங்கள் சாம்பியன்ஸ் டிராஃபி முதல் நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பவர் ப்ளே குறித்த புதிய விதிகள் அக்டோபர் 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.
|