ஆசிய கோப்பை ஒருநாள் போட்டித் தொடரின் ‘சூப்பர் 4’ சுற்றில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றன. இறுதிப் போட்டி வாய்ப்பை உறுதி செய்ய இந்த ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டியது கட்டாயம் என்பதால், இப்போட்டி மிகவும் பரபரப்பாக எதிர்பார்க்கப்படுகிறது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தானில் நடந்து வருகிறது. மொத்தம் 6 அணிகள் கலந்துகொள்ளும் இந்த தொடரின் லீக் சுற்றில் ஹாங்காங், ஐக்கிய அரபு அணிகள் வெளியேற்றப்பட்டன. அடுத்து இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் வங்கதேச அணிகள் ‘சூப்பர் 4’ சுற்றில் விளையாடி வருகின்றன.
இலங்கை அணி பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகளை வீழ்த்தி ஏற்கனவே இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுவிட்டது. கராச்சி தேசிய மைதானத்தில் இன்று நடக்கும் முக்கியமான ‘சூப்பர் 4’ சுற்று ஆட்டத்தில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் பலப்பரிட்சையில் இறங்குகின்றன.
ஏற்கனவே லீக் சுற்றில் பாகிஸ்தானை வீழ்த்தி உள்ளதால் இந்திய அணி தெம்பாக உள்ளது. ‘அடுத்தடுத்து போட்டிகளில் விளையாடுவதால் வீரர்கள் சோர்வடைந்து விடுகின்றனர்.
ஆசிய கோப்பை போட்டி அட்டவணை சரியான முறையில் அமையவில்லை’ என்று இந்திய கேப்டன் டோனி வெளிப்படையாக குற்றம் சாட்டினார்.
இந்நிலையில், மூன்று நாள் ஓய்வு கிடைத்ததால் இந்திய வீரர்கள் உற்சாகமாக உள்ளனர். வாழ்வா சாவா? போட்டியில் வெற்றிபெற பாகிஸ்தான் அணி கடுமையாகப் போராடும் என்பதால், ஆட்டத்தில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு தொடங்கும் போட்டி, ஸ்டார் கிரிக்கெட் மற்றும் டிடி சேனலில் ஒளிபரப்பாகிறது.
இந்தியா: தோனி (தலைவர்), சேவாக், கம்பீர், யுவராஜ், உத்தப்பா, யூசுப் பத்தான், ரெய்னா, ரோகித் ஷர்மா, சாவ்லா, கோனி, இஷாந்த், ஆர்.பி.சிங், ஓஜா, பிரவீண்குமார்.
பாகிஸ்தான்: மாலிக் (தலைவர்), சல்மான் பட், பவாத் ஆலம், யூனிஸ் கான், முகமது யூசுப், மிஸ்பா உல் ஹக், அப்ரிடி, இப்திகார் அஞ்சும், மன்சூர் அம்ஜத், ஜம்ஷத், சயீத் அஜ்மல், சர்பராஸ், தன்வீர், வகாப் ரியாஸ்.
|