நியூஸீலாந்து அணிக்கு எதிராக ஓவலில் நேற்று நடைபெற்ற போட்டியில் குறித்த நேரத்தில் ஓவர்களை வீசத் தவறியதற்காக இங்கிலாந்து அணித் தலைவர் பால் காலிங்வுட் சில போட்டிகளில் விளையாடத் தடை விதிக்கப்படலாம் என்று தெரிகிறது.
12 மாதங்களுக்குள் இரண்டாவது முறையாக இவரது தலைமையின் கீழ் இங்கிலாந்து அணி குறித்த நேரத்தில் ஓவர்களை வீசி முடிக்கத் தவறியுள்ளதால், ஐ.சி.சி. விதிகளின் படி 3-ம் நிலை விதி மீறலாக இது மாறியுள்ளது.
இதன் படி காலிங்வுட்டிற்கு 4 ஒரு நாள் போட்டிகள் அல்லது 2 டெஸ்ட் போட்டிகள் தடையோ அல்லது இவை இரண்டும் சேர்த்த தடையோ விதிக்கப்படலாம் என்று தெரிகிறது.
ஐ.சி.சி. ஆட்ட நடுவர் ஜவகல் ஸ்ரீநாத்தை இன்று காலிங்வுட் சந்தித்த பிறகு காலிங்வுட்டிற்கு விதிக்கப்படும் தண்டனை என்னவென்று தெரியவரும்.
மேலும் காலிங்வுட்டின் ஆட்டத் தொகையில் 50 விழுக்காடு அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் இந்தியாவிற்கு எதிராக பிரிஸ்டலில் நடைபெற்ற ஒரு நாள் போட்டியில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 3 ஓவர்களை தாமதமாக வீசியதால் காலிங்வுட்டிற்கு அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
|