சர்வதேச கிரிக்கெட் பேரவையின் கிரிக்கெட் குழுத் தலைவர் பதவியிலிருந்து சுனில் கவாஸ்கர் விலகுவதாக அறிவித்துள்ளார்.
கடந்த 8 ஆண்டுகளாக இந்த பதவியிலிருந்து வந்த சுனில் கவாஸ்கர் தனது இந்த முடிவு குறித்து கூறுகையில், "கடந்த 8 ஆண்டுகளாக இந்த பொறுப்பை முழு மன நிறைவுடன் செய்து வந்துள்ளேன், ஊடகங்களில் தனது பணி நிமித்தம் காரணமாக இரண்டு பொறுப்புகளை கவனித்துக் கொள்வது கடினமாக உள்ளது" என்றார்.
கடந்த ஆஸ்ட்ரேலிய பயணத்தில் சிட்னி டெஸ்ட் போட்டியில் ஏற்பட்ட சர்ச்சைகளின் போது ஹர்பஜனை நிறவெறியாளர் என்று குற்றம்சாட்டி தடைகளை விதித்த ஆட்ட நடுவர் மைக் புரோக்டர் மீது கடுமையான விமர்சனங்களை வைத்தார்.
அடுத்ததாக, சர்வதேச கிரிக்கெட்டில் இங்கிலாந்தும் ஆஸ்ட்ரேலியாவும் ஆதிக்கம் செலுத்தி வந்த காலங்கள் போயே போய் விட்டன என்றும், இந்தியாவின் அதிகார உயர்வைக் கண்டு இன்று புலம்பும் இவர்கள் சமீப காலம் வரையில் ஐ.சி.சி.யில் முன்னணி பதவியில் இருந்தவர்கள் என்பதை மறந்து விடக்கூடாது என்றும் பத்திரிக்கைகளில் எழுதினார்.
அவரது கூற்று மேலும் சர்ச்சைகளை கிளப்ப, ஐ.சி.சி. உயர் மட்டக் குழு கூட்டத்தில் கவாஸ்கரின் இரட்டை பொறுப்புகள் குறித்து உறுப்பு நாட்டுப் பிரதி நிதிகள் கேள்வி எழுப்பினர். இதனையடுத்து, சமீபத்தில் பதவி நீக்கம் செய்யப்பட்ட ஐ.சி.சி. தலைமைச் செயல் அதிகாரி மால்கம் ஸ்பீட், மே 5- 6 தேதிகளில் ஐ.சி.சி. கிரிக்கெட் குழு கூடும்போது கவாஸ்கர் தன் முடிவை தெரிவிப்பார் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் கவாஸ்கர் 8 ஆண்டுகளாக வகித்து வந்த ஐ.சி.சி. கிரிக்கெட் குழு தலைவர் பதவியிலிருந்து விலகியுள்ளார்.
|