பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தினால் 5 ஆண்டுகள் தடைசெய்யப்பட்டு பிறகு ஒரு மாதம் அந்த தடை இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ள ஷோயப் அக்தர் விவகாரம் குறித்து முன்னாள் வீரர் வாசிம் அக்ரம், இது ஒரு சிறந்த பாலிவுட் நகைச்சுவை என்று கூறியுள்ளார்.
தனியார் தொலைக்காட்சியின் மொபைல் சேவை ஒன்றுக்கு பேட்டியளித்த வாசிம் அக்ரம், "முதலில் நீங்கள் தடை செய்கிறீர்கள், பிறகு அவருக்கு வசதி செய்து தரும் விதமாக தடையை ரத்து செய்கிறீர்கள். அதன் பிறகு நசீம் அஷ்ரஃப், அக்தர் ஆகியோர் தொலைக்காட்சியில் தோன்றுகின்றனர், அரசியல்வாதி ஒருவர் தலையிட்டு சமரசம் செய்து வைக்கிறார். உடனே நசீம் அஷ்ரஃப் வழக்கை திரும்பப் பெறுகிறார், ஒரு நல்ல பாலிவுட் இயக்குனர் இதனை வைத்து ஒரு ஹிட் காமெடி படம் எடுக்கலாம்" என்று கூறியுள்ளார்.
மேலும் ஷோயப் அரசியலில் சேர்ந்தால் அவருக்கு அங்கு நல்ல எதிர்காலம் உள்ளது என்றார்.
4 மாத காலம் கிரிக்கெட் பக்கமே தலை வைத்து படுக்காத ஷோயப் அக்தர் எவ்வாறு கொல்கட்டா நைட் ரைடர்ஸ் அணிக்கு திறமையுடன் விளையாட முடியும் என்ற கேள்விக்கு பதிலளிக்கையில், "மைதானத்தில் நிரம்பி வழியும் ரசிகர்கள், சியர் லீடர் வகை கவர்ச்சிக் கன்னிகள் ஆகியோர் இருக்கையில் அக்தர் திறமையை வெளிப்படுத்த நிச்சயம் பாடுபடுவார். ஏனென்றால் அவர் விளம்பரத்தில் புகழடைய விரும்புபவர் என்று கூறியுள்ளார் அக்ரம்.
|