ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று நடந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை ஹைதராபாத் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சென்னை அணி தொடர்ந்து 3-வது தோல்வியை சந்தித்தது.
இந்திய பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.) சார்பில் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் 26-வது லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கத்தில் நேற்றிரவு நடந்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஹைதராபாத் டெக்கான் சார்ஜர்ஸ் அணியும் மோதியது. காயம் காரணமாக லஷ்மண் நேற்றைய போட்டியில் விளையாடவில்லை. இதனால் அணித் தலைவர் பொறுப்பை கில்கிறிஸ்ட் ஏற்றுக் கொண்டார்.
பூவா தலையா வென்ற ஹைதராபாத் அணி முதலில் சென்னை அணியை பேட் செய்யும் படி அழைத்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக பார்த்தீவ் பட்டேலும், ஸ்டீபன் பிளமிங்கும் களம் இறங்கினர். முதல் ஓவரிலே பார்த்தீவ் பட்டேல் 4 ரன்னில் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த அனிருதா ஒரு ரன்னிலும், பிளமிங் 14 ரன்னிலும் அவுட்டானார்கள். பத்ரிநாத் ரன் ஏதும் எடுக்காமல் பெவிலியன் திரும்பினார்.
43 ரன்னுக்குள் 4 விக்கெட்டுகள் இழந்து சென்னை அணி தவித்தது. சுரேஷ்ரெய்னாவும் தோனி இணை சேர்ந்து சரிவில் இருந்து மீட்டனர். 32 ரன் எடுத்திருந்த ரெய்னா பாங்கர் பந்தில் ஆட்டம் இழந்தார். அவரைத் தொடர்ந்து அணித் தலைவர் தோனி 23 ரன்னில் ஆட்டம் இழந்தார்.
பின்னர் களம் இறங்கிய மோர்கல் அதிரடியாக விளையாடினார். இவர் 19 பந்தில் 29 ரன்கள் குவித்தார். இதில் 2 சிக்சர், ஒரு பெளண்டரி அடங்கும். ஜோகிந்தர் ஷர்மா 16 ரன்கள் எடுத்தார். முடிவில் சென்னை அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 144 ரன்கள் சேர்த்தது. கடைசி 5 ஓவர்களில் சென்னை அணி 58 ரன்கள் எடுத்தது.
145 ரன்கள் எடுத்தால் வெற்றி இலக்குடன் டெக்கான் அணி களம் இறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக கில்கிறிஸ்டும், கிப்சும் விளையாடினர். 10 ரன்னில் கிப்ஸ் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த ஸ்டைரிசுடன் இணைந்து கில்கிறிஸ்ட் அதிரடியாக விளையாடினார். அவரது அதிரடியால் சென்னை பவுலர்களை கலங்கடித்தார்.
36 பந்துகளில் 54 ரன்கள் குவித்த கில்கிறிஸ்ட், மோர்கல் பந்தில் ஆட்டம் இழந்தார். இவர் 2 சிக்சர், 7 பெளண்டரிகளை விளாசினார். அடுத்து வந்த ரோகித் ஷர்மா 23 ரன்கள் எடுத்தார். அடுத்து வந்த அப்ரிடி தான் சந்தித்த ஒரே ஓவரிலேயே ஆட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தார்.
அணியின் வெற்றிக்கு 18 ரன்கள் தேவையாக இருந்த நிலையில் ஜோகிந்தர் ஷர்மா ஓவரை எதிர்கொண்ட அவர் 2 சிக்சரும், 2 பெளண்டரியும் அடித்து ஹைதராபாத் டெக்கான் அணியின் வெற்றியை உறுதி செய்தார். இதையடுத்து 18 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது
41 பந்தில் 36 ரன்கள் குவித்த ஸ்டைரிசும், 6 பந்தில் 20 ரன்கள் குவித்த அப்ரிடியும் கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தனர். டெக்கான் அணிக்கு இது 2-வது வெற்றியாகும். ஆட்ட நாயகனாக கில்கிறிஸ்ட் தேர்ந்தெடுக்கப்பட்டார். சென்னை அணிக்கு தொடர்ந்து இது 3-வது தோல்வியாகும்.
|