ஷோயப் அக்தர் மீது தொடர்ந்த மான நஷ்ட வழக்கை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் திரும்பப் பெற்றுக் கொண்டது.
முன்னதாக ஷோயப் அக்தரின் 5 ஆண்டு காலத் தடையை ஒரு மாத காலத்திற்கு நிறுத்தி வைத்ததன் மூலம் அக்தர் ஐ.பி.எல் போட்டிகளில் விளையாட அனுமதி கிடைத்துள்ளது.
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் விளையாட பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் நஸீம் அஷ்ரஃப் தன்னிடம் தொகை ஒன்றை கேட்டதாக அக்தர் கூறியதை அடுத்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அவர் மீது மான நஷ்ட வழக்கு தொடர்ந்திருந்தது.
இந்நிலையில் நேற்று பாகிஸ்தானின் முன்னணி அரசியல் தலைவர் ஒருவர் வீட்டில் நடந்த விருந்து ஒன்றில் ஷோயப் அக்தருக்கும், பாகிஸ்தான் வாரியத் தலைவர் நஸீம் அஷ்ரஃபிற்கும் சமரசம் ஏற்பட்டது. இதனையடுத்து வழக்கை திரும்பப் பெற்றுக் கொண்டார் நஸீம் அஷ்ரஃப்.
பாகிஸ்தான் பிரதமரின் உள் விவகாரத் துறை முக்கிய ஆலோசகரான ரெஹ்மான் மாலிக் வீட்டில் இந்த விருந்து உபச்சார சந்திப்பு நேற்று நடைபெற்றது. இந்த சந்திப்பின் போது அக்தர் தன் செய்கைகளுக்காக நஸீம் அஷ்ரஃபிடம் மன்னிப்பு கேட்டார்.
5 ஆண்டுகால தடை இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதால் ஐ.பி.எல். கிரிக்கெட் அணியான கொல்கட்டா நைட் ரைடர்ஸ் அணிக்கு விளையாட ஷோயப் அக்தர் டெல்லி வந்து சேர்ந்துள்ளார்.
இருப்பினும் ஷோயப் அக்தர் மீதான 5 ஆண்டுகால தடை வழக்கு அடுத்த மாதம் 6ஆம் தேதி இறுதி விசாரணைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
|