ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஐதராபாத் டெக்கான் அணி வீரர் கில்கிறிஸ்ட் அதிவேக சதத்தால் 10 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தியது. குறைந்த பந்தில் சதம் அடித்து சாதனை படைத்துள்ளார் கில்கிறிஸ்ட்.
ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் 14-வது ஆட்டத்தில் ஐதராபாத் டெக்கான் சார்ஜர்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் நேற்றிரவு மும்பையில் விளையாடியது. மும்பை அணிக்கு பொல்லாக் தலைவராக நியமிக்கப்பட்டார். பூவா தலையா வென்ற டெக்கான் அணி முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தது.
முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 79 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தவித்துக் கொண்டிருந்தது. அபிஷேக் நாயர் (34), பிராவோ (34) ஆகியோரின் பொறுப்பான ஆட்டத்தால் மும்பை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் சேர்த்தது. பொல்லாக் 31 ரன்கள் எடுத்தார்.
ஐதராபாத் அணி தரப்பில் ஆர்.பி.சிங், சஞ்சய் பங்கர், அப்ரிடி தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் அணி களம் இறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக கில்கிறிஸ்ட்டும், லஷ்மணும் விளையாடினர். கில்கிறிஸ்ட் அதிரடியாக விளையாடி 42 பந்தில் சதம் அடித்தார். இதற்கு முன்பு இதே ஐதராபாத் வீரர் சைமண்ட்ஸ் 47 பந்துகளில் சதம் அடித்ததை கில்கிறிஸ்ட் முறியடித்தார்.
கடைசி வரை இந்த இணையை பிரிக்க முடியவில்லை. ஐதராபாத் அணி 12.4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 155 ரன்கள் குவித்து 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதுவரை நடந்த ஆட்டங்களில் தொடக்க இணை குவித்த அதிகபட்ச ரன்னாகும் இது.
48 பந்துகளில் 109 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்த கில்கிறிஸ்ட் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 10 சிக்சர், 9 பெளண்டரிகளை விளாசினார். லட்சுமண் 36 ரன்கள் எடுத்தார்.
3 போட்டியில் தோல்வி அடைந்த டெக்கான் அணிக்கு இதுவே முதல் வெற்றியாகும். மும்பை அணிக்கு இது 4-வது தோல்வியாகும்.
|