ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் சேவாக் தலைமையிலான டெல்லி அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வீழ்த்தியது.
இந்திய பிரிமியர் லீக் சார்பில் இருபதுக்கு 20 போட்டியின் 13-வது ஆட்டம் மொகாலியில் நேற்று நடந்தது. சேவாக் தலைமையிலான டேர் டெவில்ஸ் அணியும், யுவராஜ்சிங் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதியது. பூவா தலையா வென்ற டெல்லி அணி முதலில் பேட் செய்தது.
அதிரடி வீரர் சேவாக் 6 ரன்னில் ஆட்டம் இழந்தார். 18 ரன்கள் எடுத்திருந்தபோது காம்பீர் அவுட்டானார். பின்னர் வந்த சோயிப் மாலிக் (19), மனோஜ்திவாரி (39), தினேஷ் கார்த்திக் (24) ஆகியோர் ஓரளவு சிறப்பாக செயல்பட்டதால் டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் சேர்த்தது.
பஞ்சாப் அணி தரப்பில் வி.ஆர்.வி.சிங் 3 விக்கெட்டுகளும், பத்தான் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி களம் இறங்கியது. ஆரம்பமே அந்த அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. முதல் ஓவரிலேயே கோயல் 1 ரன்னில் ஆட்டம் இழந்தார். சங்கக்கரா 4 ரன்னில் அவுட்டானார். பின்னர் வந்த சைமன் கேடிச் அதிரடியாக விளையாடி 52 பந்துகளில் 11 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 75 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார்.
இதைத் தொடர்ந்து வந்த அணித் தலைவர் யுவராஜ்சிங் பொறுப்பை உணர்ந்து அபாரமாக ஆடினார். 19.3 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 162 ரன்கள் சேர்த்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது. 29 பந்துகளில் 40 ரன்கள் குவித்த யுவராஜ் சிங் கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தார். இவர் 2 சிக்சர், 3 பெளண்டரிகளை விளாசினார். ஆட்ட நாயகனா சைமன் கேடிச் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதுவரை 3 போட்டியில் விளையாடி உள்ள டெல்லி அணிக்கு இது முதல் தோல்வியாகும். பஞ்சாப் அணிக்கு இது 2-வது வெற்றியாகும். ஏற்கனவே 2 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது.
|