சிறிசாந்தை அடித்த பிரச்சினை தொடர்பாக ஹர்பஜன்சிங் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இருந்து தற்காலிக நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நேற்று முன்தினம் மொகாலியில் நடந்த லீக் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது. ஹர்பஜன் சிங் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி தோல்வியை தழுகியது.
இதனால் சோர்ந்து காணப்பட்ட ஹர்பஜன் சிங்கை, சிறிசாந்த் விமர்த்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ஹர்பஜன் சிங், சிறிசாந்தை கன்னத்தில் அடித்துள்ளார். இது குறித்து பஞ்சாப் லெவன் அணி நிர்வாகம் சார்பில் இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் புகார் செய்யப்பட்டது.
இது குறித்து விளக்கம் கேட்டு ஹர்பஜன்சிங்குக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் தாக்கீது அனுப்பி உள்ளது. நாளை மாலைக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று கிரிக்கெட் வாரிய தலைமை நிர்வாகி ரத்னாகர் ஷெட்டி தெரிவித்தார்.
இந்த நிலையில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் இருந்து ஹர்பஜன்சிங் தற்காலிக நீக்கப்பட்டுள்ளார் என்று ஐ.பி.எல். சேர்மன் லலித் மோடி தெரிவித்துள்ளார். இதன்படி மும்பை இந்தியன்ஸ்-டெக்கான் சார்ஜர்ஸ் அணிகள் இடையே மும்பையில் இன்று நடக்கும் போட்டியில் ஹர்பஜன்சிங் விளையாட மாட்டார்.
நாளை ஹர்பஜனிடம் விசாரணை!
இந்த நிகழ்வு குறித்து போட்டி நடுவர் பரூக் என்ஜினீயர் தலைமையில் விசாரணை நடைபெற உள்ளது. இது பற்றி அவர் கூறுகையில், `விசாரணை திங்கட்கிழமை (நாளை) டெல்லியில் நடைபெறும். இரண்டு தரப்பினரிடமும் விசாரிக்கப்படும். விசாரணை ஒளிவு மறைவின்றி நடக்கும். முடிவு எடுப்பதற்கு முன்பாக, புகார் குறித்து மிகவும் கவனமாக ஆராய்வோம்.
பிரச்சினையை தீர்க்க எல்லா நடவடிக்கைகளும் உடனடியாக எடுக்கப்படும். பஞ்சாப் அணி நிர்வாகம் அளித்த புகார் மனுவை ஐ.பி.எல். சேர்மன் லலித் மோடி எனக்கு அனுப்பி உள்ளார். ஐ.சி.சி. நடத்தை விதிகளின் படி விசாரணை மேற்கொள்ளப்படும். விசாரணை பணியை நான் ஏற்கனவே தொடங்கி விட்டேன். வீடியோ ஆதாரம் கவனத்தில் கொள்ளப்படும்' என்றார்.
|