ஐ.சி.சி. தலைமைச் செயலதிகாரி மால்கம் ஸ்பீட் திடீரென பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கிரிக்கெட் வாரிய உறுப்பினர்களுடன் ஏற்பட்ட விரிசல்களால் அவர் நீக்கபட்டிருக்கிறார் என்று ஐ.சி.சி. வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
2001ஆம் ஆண்டு முதல் ஐ.சி.சி. தலைமைச் செயல் அதிகாரி பொறுப்பு வகித்து வரும் மால்கம் ஸ்பீடிற்கு அவரது பதவிக்கால முடிவு தினமான ஜூலை 4ஆம் தேதி வரை கட்டாய சம்பள விடுப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியத்தின் கணக்கு வழக்கு முறைகேடுகள் தொடர்பாக ஐ.சி.சி. உறுப்பினர்களுக்கும் மால்கம் ஸ்பீடுக்கும் கருத்து வேறுபாடுகள் இருந்துவந்தன. ஜிம்பாப்வே மட்டுமல்லாது இன்னும் பல விவகாரங்களிலும் விரிசல்கள் ஏற்பட்டிருந்தன என்று கூறப்படுகிறது.
ஸ்பீடிற்கு பதிலாக டேவ் ரிச்சர்ட்சன் இடைக்கால தலைமைச் செயல் அதிகாரியாக பொறுப்பு வகிக்கிறார். பிறகு ஜூலையில் நடைபெறும் ஐ.சி.சி. ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் புதிய தலைமை செயல் அதிகாரி லோர்கட் பதவி ஏற்பார்.
ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரிய அதிகாரிகள் நிதி முறைகேடுகள் செய்திருப்பதாக ஐ.சி.சி. தணிக்கை குழு அறிக்கை வெளியிட்டது. தணிக்கை குழு ஜிம்பாப்வே கிரிக்கெட் அதிகாரிகளை நீதிக் குழுவின் முன் நிறுத்தவேண்டும் என்று பரிந்துரை செய்திருந்தது.
தணிக்கைக் குழுவின் இந்த முடிவை மால்கம் ஸ்பீட் ஆதரித்து வந்ததாக தெரிகிறது. ஆனால் ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியத்தின் பலமான ஆதரவாளராக கருதப்படும் ரே மாலிக்கு ஸ்பீடின் கருத்தில் உடன்பாடில்லை. இதனால் ஐ.சி.சி. உறுப்பினர்களிடையே விரிசல் ஏற்பட்டதாக தெரிகிறது.
இதனையடுத்து பெரும்பான்மையான வாரிய உறுப்பினர்களின் கருத்திற்கிணங்க மால்கம் ஸ்பீட் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்று ஐ.சி.சி. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மால்கம் ஸ்பீடு நீக்கத்திற்கு முக்கிய காரணம் ஜிம்பாப்வே விவகாரமே என்றாலும், கபில் தலைவராக செயல்படும் இந்திய கிரிக்கெட் லீக் ஐ.சி.சி. அங்கீகாரத்திற்காக மால்கம் ஸ்பீடை அணுகியதும் ஒரு காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
மேலும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் முதன்மை நிர்வாகிகளுடன் மால்கம் ஸ்பீடிற்கு முரண்பாடுகள் இருந்து வருவதும் இந்த பதவி நீக்கத்திற்கு ஒரு காரணமாக இருக்கலாம் என்று மற்றொரு தகவல் கூறுகிறது.
|