மொஹாலி: நேற்று நடைபெற்ற ஐ.பி.எல். போட்டியில் மும்பை இந்தியன் அணி பஞ்சாப் கிங்ஸ் அணியிடம் 66 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி தழுவியது. இதன் மூலம் மும்பை அணி தன் 3ஆவது தோல்வியை சந்தித்துள்ளது.
பூவா தலையா வென்ற மும்பை இந்தியன் அணித் தலைவர் ஹர்பஜன்சிங் முதலில் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். கோயெலும் பத்தானும் துவக்கத்தில் களமிறங்கினர். பத்தான் 6 ரன்களில் ஆட்டமிழந்தார். கோயெல் 1பவுண்டரி 1 சிக்சருடன் 18 ரன்களில் ஆட்டமிழந்தார்.
மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க சங்கக்காரா மட்டும் அபாரமாக விளையாடி 56 பந்துக்ளில் 94 ரன்களைக் குவித்தார். 20 ஓவர்களில் பஞ்சாப் கிங்ஸ் அணி 182 ரன்களுக்க்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஹர்பஜன் சிறப்பாக வீசி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
மும்பை இந்தியன் அணி தன் துரத்தலை துவங்கியபோது அதிரடி மன்னன் ஜெயசூர்யா பிரட் லீயின் அபாரமான பந்து வீச்சு மற்றும் கேட்சிற்கு ஆட்டமிழந்தார். அதன் பிறகு உத்தப்பா (21) பிராவோ(23) ஆகியோர் நம்பிக்கை தரும் விதத்தில் ஆடியபோது சிங் பந்தில் உத்தப்பாவும், சாவ்லா பந்தில் பிராவோவும் ஆட்டமிழந்தனர்.
பிறகு ஷான் போலாக் 22 ரன்களிலும் சௌரவ் திவாரி 17 ரன்களிலும் ஆட்டமிழக்க பின்னால் வந்த வீரர்கள் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்தனர். மும்பை இந்தியன் அணி 116 ரன்களுக்கு சுருண்டது. சங்கக்காரா ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
|