மொஹாலியில் நேற்று பஞ்சாபைச் சேர்ந்த கிங்ஸ் அணிக்கும், மும்பை இந்தியன் அணிக்கும் இடையே நடந்த ஐ.பி.எல்.போட்டியின்போது, பஞ்சாப் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்தை ஹர்பஜன்சிங் அறைந்ததாக கூறப்படுகிறது.
மும்பை இந்தியன் அணி நேற்று தனது 3ஆவது தோல்வியை தழுவிய நிலையில் அணித் தலைவர் ஹர்பஜன் கடும் எரிச்சலில் இருந்தபோது ஸ்ரீசாந்த் அவரை வெறுப்பேற்றும் விதமாக ஏதாவது கூறியிருக்கலாம் என்று தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஹர்பஜன் அவரது கன்னத்தை பதம் பார்த்திருப்பார் என்று தெரிகிறது
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, பஞ்சாப் அணியின் ஓய்வறையில் ஸ்ரீசாந்திடம் நீண்ட நேரம் பேசிய ஹர்பஜன், அவரிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டதாக தகவல்கள் தெரிக்கின்றன.
ஆட்டம் நிறைவடைந்த பிறகு, இச்சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களின் கேள்விக்கு, ஹர்பஜன் பதிலளிக்க மறுத்துவிட்டார். கிரிக்கெட்டைப் பற்றி மட்டும் பேசுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.
அதேநேரத்தில், இப்போட்டியில் வெற்றி பெற்ற பஞ்சாப் அணியின் கேப்டன் யுவராஜ் சிங், தனது அணியின் வீரரிடம் ஒழுங்கீனமாக நடந்துகொண்ட ஹர்பஜனுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், இந்த அசிங்கமான சம்பவம் தன்னை மிகுந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது என்றும், ஸ்ரீசாந்துக்கு நிகழ்ந்ததை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் கூறினார். ஆனால் இருவருக்கும் இடையே என்ன நிகழ்ந்தது என்று தனக்கு தெரியவில்லை என்றார்.
இதே கருத்தைத் தெரிவித்த பஞ்சாப் அணி பயிற்சியாளர் டாம் மூடி, ஹர்பஜனின் நடவடிக்கை மிகவும் தவறானது என்று சுட்டிக்காட்டினார்.
ஐபிஎல் போட்டிகள் தொடங்கியதில் இருந்து, தொடர்ந்து மூன்று போட்டிகளில் தோல்வியை தழுவியுள்ளதால், ஹர்பஜன் தனது மும்பை அணி வீரர்களிடம் கூட கோபமாகவே நடந்து கொண்டுள்ளார்.
கேப்டன் பொறுப்பை வகித்து வருவது குறித்து அவரிடம் கேட்டபோது, " நான் பிறருக்காக பந்து வீசவோ, பேட் செய்யவோ முடியாது, அவரவர்கள் தங்கள் பந்து வீச்சிற்கும் பேட்டிங்கிற்கும் பொறுப்பானவர்கள், அடுத்தவர் வேலையை நான் செய்ய முடியாது" என்று கோபமாக பதிலளித்தார்.
மேலும் தோல்வியை தான் ஒரு போதும் விரும்புவதில்லை என்றும் தோல்வி மகிழ்ச்சியை அளிப்பதில்லை என்றார்.
|