கயானாவில் நடந்து வரும் முதல் டெஸ்ட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு இலங்கை அணி 438 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.
இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கயானாவில் நடந்து வருகிறது. பூவா தலையா வென்ற இலங்கை அணி முதலில் பேட் செய்தது. தொடக்க வீரர்களின் அபார ஆட்டத்தில் முதல் விக்கெட்டுக்கு 130 ரன்கள் குவித்தனர்.
வார்ணபுரா அபாரமாக விளையாடி 120 ரன்கள் குவித்தார். அணித் தலைவர் 136 ரன்கள் குவித்து அணி எண்ணிக்கைக்கு காரணமாக இருந்தார். முதல் இன்னிங்சில் இலங்கை அணி 8 விக்கெட்டுகளை இழந்து 476 ரன்கள் குவித்து ஆட்டத்தை முடித்துக் கொண்டது.
மேற்கிந்திய அணி வீரர் டெய்லர் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய மேற்கிந்திய அணி 280 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. அந்த அணியின் சர்வண் அதிகபட்சமாக 80 ரன்கள் சேர்த்தார். மற்ற வீரர்கள் குறைந்த ரன்களில் ஆட்டம் இழந்தனர்.
இலங்கை வீரர்கள் வாஸ், முரளிதரன், மிரண்டோ ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
196 ரன்கள் முன்னிலை பெற்று விளையாடியது இலங்கை அணி. முதல் இன்னிங்சில் அருமையாக விளையாடியவர்கள் இரண்டாவது இன்னிங்சில் சொதப்பினார்கள்.
அதிகபட்சமாக வார்ணபுரா 62 ரன்னும், சமர வீரா 56 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொல்லும் அளவுக்கு விளையாடவில்லை. 240 ரன்னுக்கு 7 விக்கெட்டை இழந்திருந்த இலங்கை அணி ஆட்டத்தை முடித்துக் கொள்வதாக அறிவித்தது.
இதைத் தொடர்ந்து 437 ரன்களை வெற்றி இலக்காக மேற்கிந்திய தீவுகள் அணிக்கு நிர்ணயித்தது இலங்கை அணி.
தொடக்க வீரர்களாக சுமித்- பிராவ் களம் இறங்கினர். அணியின் எண்ணிக்கை 22 ஆக இருந்த போது சுமித் 10 ரன்களில் ஆட்டம் இழந்தார். இவரது விக்கெட்டை வாஸ் கைப்பற்றினார்.
பின்னர் சர்வண் களம் இறங்கினார். இவர் பிராவ்வுடன் இணை சேர்ந்து அணியின் எண்ணிக்கையை உயர்த்தினார். பிராவ் 46 ரன்னிலும், சர்வண் 34 ரன்னிலும் களத்தில் உள்ளனர். இன்னும் 341 ரன்கள் மேற்கிந்திய தீவுகள் அணி பெற்றால் வெற்றி என்ற நிலை உள்ளது.
கடைசி நாளான இன்று 9 விக்கெட்டுகளே கைவசம் உள்ளது மேற்கிந்திய அணிக்கு. இன்று மாலை 6 மணிக்கு விளையாட்டு தொடங்குகிறது. பொறுத்திருந்து பார்ப்போம் யார் வெற்றி பெறுவார்கள் என்று.
|