சென்னையில் சேவாக் முச்சதம் எடுத்து தென் ஆப்பிரிக்க பந்து வீச்சை நாலா பக்கமும் சிதற அடித்ததும், 2வது டெஸ்டில் எதிர்பார்ப்புகள் அதிகம் ஏற்படும் என்பது உண்மையே. ஆனால் எதிர்பார்ப்புகளை அருமையான பந்து வீச்சுத் திட்டத்துடன் தென் ஆப்பிரிக்க பந்து வீச்சாளர்கள் இன்று முறியடித்தனர்.
துணைக் கண்டத்தில் நடந்த டெஸ்ட் போட்டிகள் வரலாற்றில் முதல் இன்னிங்ஸில் இவ்வளவு குறைந்த ஓவர்களில் எந்த அணியும் ஆட்டமிழந்ததில்லை என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
ஆம்! 20 ஓவர்களில் எந்த அணியும் துணைக்கண்ட ஆட்டக்களங்களில் சுருண்டதில்லை. இந்த வகையில் இந்தியா இன்று புதிய சாதனை(!) புரிந்துள்ளது.
இந்த அளவிற்கு குறைவான ரன்களில் ஆட்டமிழக்குமாறு ஆட்டக்களத்தில் எந்த விதமான பூதமும் இல்லை இல்லை இல்லவே இல்லை.
சென்னையில் முழுவதும் பேட்டிங் சாதக ஆட்டக்களம் என்று தெரிந்து 4 பந்து வீச்சாளர்களை வைத்திருந்தது. இந்த களம் பந்து வீச்சிற்கு ஓரளவிற்கு சாதகம் என்று தெரிந்திருந்தும் 5 பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கியுள்ளது இந்திய அணி.
ஆனால் ஒரு பேட்ஸ்மென் அதிகம் இருப்பதானால் மட்டும் இன்றைய இந்திய இன்னிங்சை உயிர்ப்பித்திருக்க முடியும் என்பது நம் மனக் கற்பனையாகத்தான் இருக்க முடியும்.
தென் ஆப்பிரிக்க அணி இந்த போட்டிக்கு முன் ஷாட் பிட்ச் பந்துகளை பயன்படுத்தப்போவதாக கூறியிருந்தது. ஆனால் ஷாட் பிட்ச் பந்துகளை அவர்கள் அவ்வளவாக பயன்படுத்தவில்லை.
சென்னையில் கற்றுக் கொண்ட பாடத்தின் மூலம் புதிய திட்டத்தை தென் ஆப்பிரிக்க அணி இன்று கடைபிடித்தது. அதாவது ஆஸ்ட்ரேலிய மண்ணில் நம் பந்து வீச்சாளர்கள் கடைபிடித்த அதே முறைதான்.
நல்ல அளவில் வீசி பந்தை சற்றே ஸ்விங் செய்வது. அதைத்தான் இன்று தென் ஆப்பிரிக்க வீச்சாளர்கள் செய்தனர்.
மக்காயா நிட்டினி சென்னையில் அதிவேகத்தில் வீசி அடி வாங்கினார். ஆனால் இன்று வேகத்தை குறைத்தார், நல்ல திசையில் துல்லியமான அளவில் சற்றே உள்ளேயும் வெளியேயும் மாறிமாறி ஸ்விங் செய்தார் அவ்வளவுதான். ஜாஃபர், லக்ஷ்மண், சேவாக், திராவிட், கங்கூலி என்று அனைவரும் பெவிலியனில்!
|