ஆஸ்ட்ரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்க மைதானங்களில் நடைபெறும் டெஸ்ட் போட்டிகளில் 4ஆம் நாள் இறுதியில் அல்லது 5ம் நாள் துவக்கத்தில்தான் ஒரு டெஸ்ட் போட்டி டிரா ஆகும் என்று தெரியவரும். ஆனால் இந்தியாவில் கடந்த சில தொடர்களில் முதல் நாளே டெஸ்ட் போட்டி டிரா ஆகும் என்று கணித்து விட முடிகிறது.
இன்னமும் டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு ஓரளவிற்கு கூட்டம் வருவது இந்தியாவில்தான். ஆனால் சென்னையில் போடப்பட்ட ஆட்டக்களம் போல் தொடர்ந்து போடப்பட்டால் டெஸ்ட் கிரிக்கெட் இனி மெல்ல.. அல்ல அல்ல வேகமாகச் சாகும்.
அகமதாபாத் டெஸ்ட்:
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக நாளை அகமதாபாதில் 2ஆவது டெஸ்ட் தொடங்குகிறது. இந்த ஆட்டக்களத் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள திராஜ் பார்சனா நடு நிலையான ஆட்டகளமாக இருக்கும் என்று கூறியுள்ளார். தற்போது களத்தில் லேசாக புற்கள் உள்ளது. நாளை டெஸ்ட் துவங்கும் முன் இருக்கும் புற்களையும் மழித்து விட்டால், செத்த ஆட்டக்களமாகவே இருக்கும்.
கடந்த முறை ஆஸ்ட்ரேலியா இங்கு வந்த போது பெங்களூரில் இது போன்ற ஆட்டக்களம் தயாரிக்கப்பட்டது. முதலில் பேட் செய்த ஆஸ்ட்ரேலிய அணி மிகப்பெரிய ரன் இலக்கை எடுத்து பின்பு பந்து வீச்சில் ஆஃப் கட்டர்களை வீசி, கள வியூகத்தை ரன் தடுப்பு வியூகமாக அமைத்து, வெறுப்பேற்றி, இந்திய வீரர்களை வீழ்த்தி வெற்றியும் பெற்று விட்டது.
முழுதும் மழிக்கப்பட்ட செத்த ஆட்டக்களங்களில் பூவா தலையா வெல்லவில்லையெனில் கடினம்தான். ஒரு டெஸ்ட் போட்டியை பூவா தலையாவா தீர்மானிக்கும்? ஆனால் அப்படியும் முடிவுகள் ஏற்படும் என்று கூறமுடியாது.
திராஜ் பார்சானா களம் பற்றி ஏதும் கூற தயங்கி வருகிறார். முதலில் பந்து வீச்சாளர்களுக்கு கொஞ்சம் சாதகமாக இருக்கும். பிறகு பேட்ஸ்மென்களுக்கு சாதகமாக இருக்கும் என்றே கூறியுள்ளார்.
|