வெள்ளி, 29 மார்ச் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 26 பிப்ரவரி 2019 (17:32 IST)

சிறப்பான ஆட்டம் – இந்திய விமானிகளைப் பாராட்டிய சேவாக் !

புல்வாமாத் தாக்குதலுக்கு எதிர்வினையாற்றும் விதமாக இன்று இந்திய விமானிகள் பாகிஸ்தான் எல்லையில் உள்ள பயங்கரவாதிகளின் முகாம்களை தாக்கி அழித்துள்ளனர்.

புல்வாமாத் தாக்குதலுக்குப் பதிலடிக் கொடுக்கும் விதமாக இந்தியா விமானப் படை இன்று பாகிஸ்தான் எல்லையில் மூன்று இடங்களில் தாக்குதல் நடத்தி தீவிரவாத முகாம்களை அழித்துள்ளது. பாலக்கோட் பகுதியில் தீவிரவாத முகாம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் மூத்த கமாண்டர்களும் அந்த இயக்கத்தின் தலைவர் மசூத் அசாரின் மைத்துனரும் கொல்லப்பட்டுள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கூறியுள்ளார்.

கார்கில் போருக்குப் பிறகு இருபது ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா எல்லைத் தாண்டி தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதலுக்கு எதிர்க்கட்சிகள் உள்ளிட்டப் பலக் கட்சிகளின் தலைவர்கள் ஆதரவு தெரிவித்துப் பாராட்டியுள்ளனர். இந்தத் தாக்குதலால் இந்திய எல்லைப்பகுதிகளில் பதற்றம் நிலவி வருகிறது. குஜராத், பஞ்சாப், ராஜஸ்தான் மாநில எல்லையோரம் ராணுவம் உஷார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது.

இந்திய விமானிகளின் இந்த தைரியமான தாக்குதலை இந்தியாவில் உள்ள பொதுமக்களும் அரசியல் தலைவர்களும் பாராட்டி வருகின்றனர். அந்த வரிசையில் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக்கும் தனது பாராட்டைத் தெரிவித்துள்ளார். டிவிட்டரில் தனகேயுரிய பாணியில் ‘நமது வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளீர்கள் (The boys have played really well) என உச்சிமுகர்ந்து வாழ்த்தியுள்ளார்.

தீவிரவாதத் தாக்குதலால் உயிரிழந்த 45 வீரர்களின் குழந்தைகளின் கல்விச்செலவையும் சேவாக் ஏற்பதாக முன்பே அறிவித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.