வெள்ளி, 29 மார்ச் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. கட்டுரைகள்
Written By அ.கேஸ்டன்
Last Modified: செவ்வாய், 31 மே 2016 (18:08 IST)

புஸ்வாணமாகிப்போன ஐபிஎல் கிரிக்கெட்: ஆரவாரம் இல்லாமல் அடங்கிப் போனது!

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா கிட்டத்தட்ட உலகக்கோப்பை கிரிக்கெட் போல் வெகு விமரிசையாக இந்தியாவில் நடத்தப்படும். பணம் புரளும் இந்த கிரிக்கெட் தொடரில் பங்குகொள்ள உலகின் அனைத்து கிரிக்கெட் வீரர்களும் விருப்பப்படுவார்கள்.


 
 
ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பால் இந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தொடர்ந்து 9 ஆண்டுகளாக நடந்து வருகிறது. ஆனால் இந்த முறை ஐபிஎல் தொடருக்கு அவ்வளவு வரவேற்பு இல்லாமல் புஸ்வாணமாகி போனது.
 
ஐபிஎல் கிரிக்கெட்டில் ரசிகர்களின் ஆதிக்கம் அதிகம் உள்ள அணி என்றால் அது சென்னை மற்றும் மும்பை என்று தான் கூற வேண்டும். இந்த இரு அணிகளுக்கும் இந்தியா முழுவதும் ரசிகர்கள் உண்டு. ஆனால் இந்த முறை சென்னை அணி இந்த தொடரில் பங்கேற்க தடைவிதிக்கப்பட்டதால் சென்னை அணி இந்த ஐபிஎல் தொடரில் பங்கேற்கவில்லை.
 
இதனால் மிகுந்த ஏமாற்றம் அடைந்த ரசிகர்கள் சென்னை அணி இல்லாத ஐபிஎல் போட்டியை அவ்வளவு ஆர்வமாக பார்க்கவில்லை. சென்னை மற்றும் ராஜஸ்தான் அணியின் உரிமையாளர்கள் ஐபிஎல் தொடரில் சூதாட்டத்தில் ஈடுபட்டதால் அந்த அணிகளுக்கு இரண்டு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 
இந்த இரு அணிகளுக்கும் பதிலாக புனே மற்றும் குஜராத் அணிகள் இரண்டு ஆண்டுகளுக்காக அறிமுகப்படுத்தப்பட்டது. சென்னை, ராஜஸ்தான் வீரர்கள் ஏலம் விடப்பட்டு புதிய இரு அணியையும் உருவாக்கி இந்த ஆண்டு ஐபிஎல்-ஐ நடத்தி முடித்தார்கள்.
 
ஆனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இல்லாத ஐபிஎல் போட்டிகளை பார்க்க ரசிகர்கள் அவ்வளவு முக்கியத்துவம் அளிக்கவில்லை. வழக்கமாக தமிழகத்தில் ஐபிஎல் என்றால் ஒவ்வொரு நாளும் பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்ப்பார்கள். ஆனால் இந்த முறை எந்தெந்த அணிகள் விளையாடுகின்றன. அவை எப்படி விளையாடுகின்றன போன்றவற்றை கூட மக்கள் அறிய ஆர்வம் காட்டவில்லை.
 
சென்னை அணியின் வெற்றி கேப்டனாக வலம் வந்த தோனி புனே அணிக்கு கேப்டனாக செயல்பட்டாலும் அவரால் கூட அந்த அணியை சரியாக வழி நடத்த முடியாமல் லீக் சுற்றிலேயே வெளியேறியது. இதுவரை நடந்த ஐபிஎல் போட்டிகளில் சென்னை அணி அனைத்திலும் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இவை அனைத்திற்கும் தோனி கேப்டனாக செயல்பட்டார்.
 
தற்போது முதல் முறையாக தோனியை கேப்டனாக கொண்ட ஒரு ஐபிஎல் அணி லீக் சுற்றுடன் வெளியேறியுள்ளது. தேன் கூடு மாதிரி இருந்த சென்னை அணி கலைக்கப்பட்டதால் தான் இந்த நிலமை என கிரிக்கெட் ரசிகர்கள் கூறுகின்றனர்.
 
சென்னை அணி இந்த ஐபிஎல் தொடரில் இல்லை என்பதால் ஐபிஎல் தொடர் எப்பொழுது ஆரம்பித்தது, எப்பொழுது முடிந்தது என்பது கூட தெரியவில்லை என்கிறார் சென்னையை சேர்ந்த ஒரு கிரிக்கெட் ரசிகர். சென்னை சூப்பர் கிங்ஸ் என்ற அணியால் மற்றும் கேப்டன் தோனியால் தான் ஐபிஎல் இவ்வளவு பிரபலமாக வளர்ந்தது எனவும், அந்த அணி தற்போது இல்லை என்பதால் ஐபிஎல் போட்டியும் தற்போது அதன் வரவேற்பை இழந்துள்ளது என்கிறார் மற்றொரு கிரிக்கெட் ரசிகர்.